Saturday 13 July 2013

தந்தி மகராசன் தவறிட்டானே.....



           ''ஊருக்கெல்லாம் சாவு செய்தி சொன்ன ஒனக்கும் ஒரு நாளை குறிச்சிட்டாங்களே? 164 வருஷமா என்னமா வாழ்ந்தே நீ. நினச்சமா நாங்க உனக்கும் ஒரு கேடு வருமுன்னு....தந்தி சேவகன் கையிலே ஜம்முன்னு நீ உக்காந்து வருவே...அலறுமே சனமெல்லாம் நீ வாரத பாத்து....மகராசன் காந்திக்கும் உம்மேல பிரியமாச்சே! நாடு முழுசும் சேதி சொல்ல உன்ன தானே நம்பினான் அந்த வெள்ளக்கார தொரையும்? என்னமோ மொபைல் போனாம்....இன்டெர்நெட்டாம்...ரெண்டு பேரும் சேந்தாங்க...உனக்கு ஒரு நாளும் குறிச்சாங்க.....நீ நல்லா வாழ்ந்த வரைக்கும் நாடெல்லாம் சேதி சொன்னே....இன்னைக்கி உன்ன காப்பாத்த நாதியத்துப் போச்சே? உன்னால நஷ்டம்ங்கிறாங்க...ஊரு ஒலகமம் எல்லாம் இதே நெலம தான்...தந்தி மகராசன கடசியா வாழ வச்சிட்டிருந்தது நம்ம நாடு மட்டும் தானாம்....அதுக்கும் வச்சிட்டாங்கய்யா இப்ப ஆப்பு!"

          கிராமத்தில ஒப்பாரி வைக்கிற ஆயா, நிறுத்தப் படும் தந்தி சேவைக்கு ஒரு ஒப்பாரி வைத்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை தான் மேலே.

தந்தி--சில தகவல்கள் 

              அன்றைய கல்கட்டாவிற்கும், அதிலிருந்து 13 மைல் தள்ளி, ஹூக்ளி நதி ஓரத்தில் அமைந்த Diamond Harbour க்கும் இடையே, இந்தியாவின் முதல் தந்தி சேவை 1850ல் துவக்கப் பட்டது.

                     2013, ஜூலை  15 அன்று  இந்தியாவில் தந்தி சேவை நிறுத்தப் படும் என்று  BSNL நிறுவனம் அறிவித்திருக்கிறது.

                     குதிரை மீதும், கழுதை மீதும் பயணம் செய்து தகவல் கொண்டு சென்ற காலம் உண்டு. இப்போது நொடியில் பரிமாறப் படும் தகவல் சென்றடைய , அப்போது, பத்து நாட்கள் வரை கூட ஆகும். 

                       1836ல் அமெரிக்காவை சேர்ந்த சாமுவேல் மோர்ஸ் என்ற பெயிண்டர், இயற்பியல் துறை சார்ந்த ஜோசெப் ஹென்றி மற்றும் ஆல்ப்ரெட் வெய்ல்ஆகியோர் இணைந்து கண்டு பிடித்த electrical telegraph system தான் உலக தந்தி வரலாற்றின் ஆரம்ப புள்ளி. எழுத்து வடிவிலான தகவலை தொலை தூரத்திற்கு அனுப்ப உதவும் முறை மோர்ஸ் கோட் எனப் படுகிறது. 

                Teleprinter மற்றும்  e-mail கண்டுபிடிப்பு  தந்தி அனுப்பும் முறையில்  மாற்றங்களை கொண்டு வந்தது. Teleprinter தந்தி அனுப்பும் வேலையை துரிதப் படுத்தியது. பின்னர் e-mail  உதவியோடு  தந்திகளை அனுப்பும் முறை  வந்தது.

                    1990 வரை  இந்திய தபால் துறையின் ஓர் அங்கமாக தந்தி சேவை இயங்கி வந்தது. பின்னர்  தொலை தொடர்பு துறை வசம்  தந்தி சேவை ஒப்படைக்கப் பட்டது.

             30 ஆண்டுகளுக்கு முன்  தந்தி சேவையின்  தேவை  உச்சத்தில் இருந்த கால கட்டத்தில், நாடு முழுவதும் 45,000 தந்தி அலுவலகங்கள் இயங்கி வந்தன. தற்போது  75 தந்தி அலுவலகங்கள் தான் இயங்கி வருகின்றன.

                 1980களில், இந்தியாவில், ஒரு நாளைக்கு ஒரு லட்சம் தந்திகள் கூட  அனுப்பப் பட்டன. இப்போது ஒரு நாளைக்கு 5000 தந்திகள் தான் அனுப்பப் படுகின்றனவாம்.

              பிரிட்டனில், தந்தி சேவை நிறுத்தப் பட்டு விட்டால் கூட, 100வது பிறந்த நாளை கொண்டாடும் மக்களுக்கு, இங்கிலாந்து அரசியிடமிருந்து வாழ்த்து தந்தி அனுப்பப் படுகிறது.

                  தந்தி சேவையை பயன் படுத்தி வந்த கடைசி நாடு இந்தியா.

      இந்தியாவில் தந்தி சேவை நிறுத்தம் குறித்து செய்திகளின் தலைப்புகள் வித்தியாசமாக இருந்தன. அவற்றில் சில...

"   Victory to the e-mail"   --லண்டனின்  "The Times".

"End of an era"--the Telegraph of UK.

"Dot, dash, full stop: Telegram service ends July 15" -The Hindu. 

           ஊட்டி மலை ரயில் சேவை போல, தந்தி சேவையையும் பழங்கால நினைவுக்காக, சிறிய அளவில் தொடர்ந்து நடத்தலாம்  என்ற  கோரிக்கை பரவலாக எழுப்பப் படுகிறது.

      கடைசி தந்தியை  அனுப்பி, எதிர்கால  நினைவு பொருளாக்கும் நோக்கத்தில்  தந்தி அனுப்புவோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. நீங்களும் அனுப்பி விட்டீர்களா?

           பழைய  நினைவை போற்றும் விதமாக தந்தி அனுப்ப விரும்புவோர்  கவலைப் பட வேண்டாம்http://www.telegramstop.com/  என்ற இணைய தளம் மூலம் நீங்கள் எப்போதும் தந்திகள் அனுப்பலாம். எதிர்கால தேதி குறிப்பிட்டு கூட தந்தி கொடுக்கலாம். நீங்கள் குறிப்பிடும் தேதியில் தந்தி உரியவருக்கு அனுப்பப் படும்.

2 comments:

sundarramg said...

தந்தி என்றும் தவறியதில்லை. சரியான நேரத்தில் சரியான நபருக்கு சென்றடைந்திருக்கிறான்.தந்தி கெட்ட நிகழ்வுக்கு மட்டும் அடிக்கப் படவில்லை. பல நல்ல விஷயங்களுக்கும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இளைஞர்கள் வரும்பொழுது முதியவர்கள் ஓய்வெடுப்பதை நல்ல நிகழ்வாகவே எடுத்துக் கொண்டு வாழ்த்தி வழியனுப்புவோம். ஒப்பாரி வைக்க வேண்டாமே...

ஸ்ரீவித்யா said...

முதியவர்களை old age home அனுப்புகிறோம். ஆனால் தந்தியை deep freezorல் அல்லவா வைத்து விட்டோம்.

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...