Tuesday 1 April 2014

இயற்கை வேளாண் பண்ணையில் ஒரு நாள்

இயற்கை விவசாய பழ பண்ணையில் திரு. ராஜேந்திரனுடன் வர்ஷினி கணேசன் 

கடந்த வார சனிக்கிழமை மிகவும் மகிழ்ச்சியாக கழிந்தது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகில் உள்ள வடக்குமேடு கிராமம். அங்கு உள்ளது திரு.ராஜேந்திரன் அவர்களின் 28 ஏக்கரில் விரிந்து கிடக்கும் இயற்கை வேளாண் பண்ணை. எனது நண்பர் திரு. கணேசன் என்னை அங்கே அழைத்துச் சென்றார்.

சொந்த உபயோகத்திற்கு நெல், கேழ்வரகு, நிலக்கடலை, காய்கறி பயிர்கள். இரண்டு, மூன்று நாட்டு மாடுகள். நாடா கட்டில் போட்ட கிராமத்து வீடு. கேப்பை கூழ்.... கேப்பை களி ....ஒருவேளை மட்டும் அரிசி சோறு (அதுவும் organic)....இயற்கை காற்று....ஒருமுறை பண்ணையை சுற்றி வந்தால் போதும். தனியாக நடைபயிற்சி தேவையில்லை. எளிமையான ,இனிமையான வாழ்க்கை.

விற்பனைக்கு சப்போட்டா, நெல்லி, கொய்யா, மா கனிகள்.

இதுதவிர, தேன்நெல்லி, இஞ்சிநெல்லி ஆகிய மதிப்பு கூட்டப் பட்ட பொருள்கள். 

கூந்தலுக்கு நெல்லி தைலம், காய்ந்த சப்போட்டா பழங்கள் (dry naseberry) என புதிய முயற்சிகள்.

இயற்கை வேளாண் பண்ணை சென்று வந்ததில் மன நிறைவு தந்த ஒரு விஷயம்....ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வர்ஷினி கணேசனின் இயற்கை தோட்டக்கலை ஆர்வம்... "நாளைய சமுதாயத்திற்கு நஞ்சில்லா உணவு நிச்சயம்" என்ற நம்பிக்கையை தந்தது. 


நெல்லி, சப்போட்டா மரங்கள்
PHOTOS: Varshini Ganesan


இயற்கை வேளாண் முயற்சியில் திரு.ராஜேந்திரனுக்கு உறுதுணையாக அவரது மனைவி திருமதி. மேகலா ராஜேந்திரன், தாயார், 76 வயதான தந்தை வேடியப்பன் ஆகியோர் இருக்கிறார்கள். வேலை செய்ய இரண்டு பேர். அவ்வளவுதான். 28 ஏக்கர் பழப் பண்ணை முழுதும் இவர்கள் உழைப்பை மட்டுமே நம்பி தழைத்திருக்கின்றன. இவர்களது கடும் உழைப்பை நினைத்தால் மலைப்பாய் இருக்கிறது.


திருமதி. மேகலா ராஜேந்திரன் மற்றும் ராஜேந்திரனின் தயார் 

'96ல் விவசாய நிலம் வாங்கி, 98ல் இயற்கை வேளாண்மை துவங்கி, இன்றுவரை 16 வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். துவக்கத்தில் இருந்தே ரசாயன உரமோ, பூச்சிக்கொல்லிகளோ உபயோகித்தது இல்லை.

இங்கே சென்றால், இயற்கை விவசாயம் பற்றிய நமது பார்வையே மாறிவிடுகிறது.

சென்னையில் இருக்கும் வரை ஒரு consumerist mindset தான் இருக்கிறது. எந்த ஒருபொருளையும் அதன் விலையை வைத்துதான் மதிப்பிடுகிறோம். குறைவான விலையில் கிடைக்கும் பொருளையே நாடுகிறோம்.

பழங்கள், காய்கறிகள் போன்றவை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப் படுவதில்லை. விவசாயி தரும் உழைப்பையும், வியர்வையும் உறிஞ்சித்தான் இவை உற்பத்தி ஆகின்றன.


திரு.ராஜேந்திரனின் தாயார், தந்தை வேடியப்பன் மற்றும் மனைவி மேகலா ராஜேந்திரன் 


சப்போட்டா செடிகளுக்கு இடையே 30 அடி இடைவெளி தேவை. அப்போதுதான் சூரிய ஒளி பூமியில் படும். செடியிலேயே முழுமையாக பழுத்த பின் பறிக்கப் படும் பழங்கள் தான் தேன் சுவையுடன் இருக்கும். அருகருகே இருக்கும் பழுத்த பழங்களையும், பழுக்க வேண்டிய காய்களையும் அடையாளம் காண வேண்டும்.

எப்படி என்று சொல்கிறார் திரு. ராஜேந்திரன். சப்போட்டா பழத் தோலில், நகத்தால் மிக சிறிய கோடு கிழிக்க வேண்டும். கவனிக்கவும். பழத்தை பாழாக்கி விடக் கூடாது. வெளி தோலில் தெரியும் காவி நிறம் உள்ளேயும் தெரிந்தால் அது பறிக்க வேண்டிய பழம். பச்சையாக இருந்தால் அது காய். 

சப்போட்டா பழத்தை பறித்ததும், காம்பு இருந்த பகுதியில் பால் பொங்கி வரும். பால் பழத்தில் சொட்டி விட்டால் பழம் கெட்டு விடும். பால் வடியும் பகுதியை அப்படியே தரையில் படும்படி கவிழ்த்து வைக்க வேண்டும் என்று செய்து காட்டுகிறார். சிறிது நேரத்தில் பால் வடிவது நின்று விடும்.

சப்போட்டாவில் முள் தெரிகிறதா?
சப்போட்டா பழத்தின் இன்னொரு பக்கத்தில் சிறிய முள் போன்று இருக்கிறது. அதை அப்படியே விட்டால் மற்ற பழங்களை damage செய்து விடும். அதை பக்குவமாக ஒடித்து விட வேண்டும்.

பழங்கள் அழுக துவங்கு முன் கடைக்கு அனுப்பி விடவேண்டும்.

இத்தனை risk எதற்கு என்றுதான் சிலர் காயாக பறித்து, calcium carbonate வைத்து வேலையை முடித்துக் கொள்கிறார்கள்.

ஒரே செடியில் 50 கிலோ வரை பழங்கள் விளைகின்றன. இருந்தாலும் பறவைகள் கொத்தி தின்பதில் குறிப்பிட்ட அளவு பழங்கள் வீணாகி விடுகின்றன. கூலி ஆள் கிடைக்காததால் பறிக்க முடியாமல் பழங்கள் வீணாகின்றன. நாம் நடந்து சென்ற வழி நெடுக, சப்போட்டா மரங்களின் கீழ் கிளி கொத்திய கனிகளும், கனிந்து விழுந்த சப்போட்டாக்களும் சிதறிக் கிடக்கின்றன. பறவைகள் சுவையான பழத்தைத்தான் கொத்தும் என்று சொல்லி ஒரு பழத்தை எடுத்து, கடிபட்ட பகுதியை விரலால் நீக்கி, அழகாக மண்ணை துடைத்து தருகிறார். ஆஹா....அற்புத சுவை.


மரத்திலேயே கனிய விடுவதால் வீணாகும் பழங்கள், கனிந்த பின் பறிப்பதால் ஒரு சில நாட்களிலேயே அழுகி விடும் ஆபத்து, நகரங்களில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் பண்ணையிலிருந்து, நகரத்திற்கு பழங்களை கொண்டு செல்ல ஆகும் செலவு....இவைதான் ஆர்கானிக் பழங்களின் விலை உயர்விற்கு காரணம். 

திரு.ராஜேந்திரனின் பண்ணையில் ஒரு கிலோ சப்போட்டா  விலை 35 ரூபாய்தான். இது சென்னை நகரின் தெரு ஓரங்களில் விற்கப்படும் நான்காம் தர சப்போட்டாவை விடவும்  குறைவான விலைதான்.

சப்போட்டா செடிகளுக்கு இடையில் ஊடு பயிராக நெல்லி செடி. நெல்லிகனிகளின் கனம் தாங்காமல் செடி சாயும் அளவு காய்த்து குலுங்குகிறது.


                                                                          PHOTO: Varshini Ganesan


மாம்பூக்களும், பிஞ்சு வடு மாங்காய்களுமாக மாந்தோப்பு நம்மை கவர்கிறது. மாம்பழம் சுவைக்க இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். இமாம் பசந்து, அல்போன்சோ, பங்கனபள்ளி, அமர்பாலி, மல்லிகா (மல்கோவா, பெங்களூரா பழங்களின் ஒட்டு), செந்தூரா, காதர், பெங்களூரா (கிளிமூக்கு மாங்காய்), நீலம் ஆகிய மா வகைகளை பயிரிட்டிருக்கிறார்.

திரு.ராஜேந்திரன், அவர் மனைவி  திருமதி. மேகலா ராஜேந்திரன் ஆகிய இருவருமே முதுகலை பட்டம் பெற்றவர்கள். திரு.ராஜேந்திரன் M.B.A (H.R) படித்திருக்கிறார். M.Phil. பட்டம் பெற்ற அவர் மனைவி பள்ளி ஆசிரியை பணியை விட்டு விலகி விவசாயம் செய்கிறார். 
திரு. ராஜேந்திரன் 

ஏரிகளை காக்க தவறியதால் ஏற்படும் வறட்சி, விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத சமுதாயம், லே அவுட்களாக மாறும் விவசாய நிலங்கள், விஷமில்லாத ஆரோக்கிய உணவின் அவசியம் என்று பல விஷயங்களை அவர் பேசி கேட்பது ஒரு பல்கலை கழக ஆசிரியரிடம் பயிலும் உணர்வை தருகிறது. அவ்வளவு தகவல்களை போகிற போக்கில்    தருகிறார். 

மா, சப்போட்டா, கொய்யா, நெல்லி என்று நான்கு வித பழங்கள் பயிரிடுவதால் ஏதாவது ஒரு பழம் வருடம் முழுதும் கிடைக்கும். நெல்லிக்காய்கள் மட்டும் வருடம் முழுதும் கிடைக்கும் என்கிறார். மருத்துவத்திற்கு பயன்படும் நெல்லிக்கனிகள் இவரிடம் கிடைக்கின்றன. 

தேன்நெல்லி, இஞ்சிநெல்லி, dry sapota, நெல்லி  கூந்தல் தைலம் (Amla Hair Oil) என்று புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுகிறார். இவை மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் (value added products) என்பதோடு மட்டும் அல்லாமல், குறிப்பிட்ட சீசனில் கிடைக்கும் பழங்களை வீணாக்காமல் வருடம் முழுதும் பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த பொருள்களை தயாரிக்கிறார். எந்தவிதமான preservative பொருள்களையும் இவர் இவற்றில் பயன் படுத்தவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
திரு.கணேசன் (இடது பக்கம்) மற்றும் திரு ராஜேந்திரன் 

இதோ அவர்  தந்த சில பயனுள்ள குறிப்புகள்:


நெல்லி கூந்தல் தைலம் தயாரிப்பது எப்படி?
தேவையான பொருள்கள்:
நெல்லி சாறு - 1 லிட்டர் 
தேங்காய் எண்ணெய் - 1 லிட்டர் 
கரிசலாங்கண்ணி இலை
பொன்னாங்கண்ணி இலை 
ஆவாரம்பூ 
நெல்லி சாறு அளவில் நான்கில் ஒரு பங்கு வரும் அளவு மேலே சொன்ன இலைகள், ஆவரம்பூவை எடுத்துக் கொள்ள வேண்டும். 
செய்முறை 
ஒரு லிட்டர் நெல்லி சாறு எடுக்க 10 கிலோ நெல்லிக்காய் தேவைப்படும். கரிசலங்கண்ணி, பொன்னாங்கண்ணி, ஆவாரம்பூ ஆகியவற்றை நன்கு காய வைத்து பொடி செய்யவும். 



நெல்லி சாறு, மேலே சொன்ன பொடி ஆகியவற்றை கலந்து கொதிக்க விடவும். நெல்லி சாறு மூன்றில் ஒரு பங்காக சுருங்கும் வரை கொதிக்க விட வேண்டும்.


இப்போது தேங்காய் எண்ணெய் சேர்த்து திரும்பவும் கொதிக்க விட வேண்டும். தைலம் சரிபாதியாக சுருங்கும் வரை காய்ச்ச வேண்டும்.



அவ்வளவுதான். நெல்லி கூந்தல் தைலம் தயார். இது கடையில் வாங்கும் எந்த கூந்தல் தைலத்தை விடவும் அதிக நெல்லிக்காய் சத்தை கொண்டிருக்கும் என்கிறார் திரு.ராஜேந்திரன். 


நெல்லி தைலம் இள நரையை தடுக்கும். கூந்தலுக்கு ஆரோக்கியமும், பள பளப்பும் தரும்.



நெல்லிபொடி


நெல்லிக்காயை நெல்லி முள்ளி போல் சுக்காக காய வைத்து, அத்துடன் சம பங்கு நன்கு காய்ந்த வால் மிளகு சேர்த்து, பொடி செய்யவும்.

முக்கியமாக கவனிக்க வேண்டியது....பொடி செய்யும்போது சூடு ஏற்படாமல் பொடி செய்ய வேண்டும். அதாவது மிக்சி போன்ற இயந்திரங்கள் பயன்படுத்தாமல் கைகளால் அரைக்க வேண்டும்.


இந்த பொடியை தினமும் தேனில் கலந்து சாப்பிடலாம். சளி, மூச்சிறைப்பு போன்றவை குறையும். பொதுவான ஆரோக்கியத்திற்கும் நல்லது.




Naseberry dry fruit (உலர் சப்போட்டா)


நன்கு கனிந்த சப்போட்டா பழங்களை, தோல் நீக்கி, சுத்தமான பாத்திரத்தில் போட்டு சிறிது நேரம் வெய்யிலில் உலர்த்தவும்.

முக்கியமாக கவனிக்க வேண்டியது-நீண்ட நேரம் வெய்யில் உலர்த்த கூடாது. அவ்வாறு செய்தால் பழம் கடின தன்மை பெற்று விடும்.


சப்போட்டா பழத்தில் உள்ள நீர் தன்மை கொஞ்சம் குறையும் வரை (2 மணி நேரம்) வெய்யிலில் உலர்த்தினால் போதும்.


பிறகு பழத்தை நிழலில் காய வைக்க வேண்டும். வெய்யில் தாக்கத்தை பொறுத்து, ஒரு வாரம் வரை காய வைக்க வேண்டி வரும்.


அவ்வளவுதான். உலர் சப்போட்டா ரெடி. வருடம் முழுதும் பயன்படுத்தலாம். எந்த preservativeம் கிடையாது. Dry grapes போல நல்ல சுவையாக இருக்கும்.



சென்னையில் ஆர்கானிக் பழங்கள் 

இயற்கை உரங்கள் போட்டு பழ மரங்கள் வளர்த்தால் மட்டும் போதாது. செயற்கையாக பழுக்க வைத்தால் அந்த பழங்களில் சுவை இருக்காது. மரத்திலேயே கனிந்த பழங்களில் உள்ள சுவை மற்றவற்றில் இருக்காது. பொதுவாக நான் ஆர்கானிக் உணவு பொருள்களை தேடிச் சென்று வாங்குவது அவற்றின் சுவைக்காகவே. 

தனது இயற்கை வேளாண் தோட்டத்தில் விளையும் சப்போட்டா, மாம்பழம், நெல்லிக்காய், கொய்யா போன்றவற்றை சென்னையில் கிடைக்க செய்ய சில முயற்சிகள் செய்து வருகிறார் திரு. ராஜேந்திரன்.

ஆர்கானிக் பழங்களை சென்னையில் வாங்க விரும்புவோர் திரு. ராஜேந்திரனை தொடர்பு கொள்ளலாம். ஆரணி பக்கம் உங்களுக்கு ஏதேனும் வேலை இருந்தால் அப்படியே அவரது தோட்டத்திற்கு சென்று பழங்கள் வாங்கி வரலாம். தொடர்புக்கு: 9443625731 

PHOTOS: வர்ஷினி கணேசன் 


4 comments:

Anonymous said...

good effort with a commendable write up for a resourceful future.

திண்டுக்கல் தனபாலன் said...

திரு. ராஜேந்திரன் அவர்கள் மென்மேலும் சிறக்க வேண்டும்... வாழ்த்துக்கள் பல...

பயனுள்ள குறிப்புகளுக்கும் நன்றி...

Unknown said...

Wish him all the best

Unknown said...

would like to have more such informations in future
Latha Sudhakar

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...