Monday 19 May 2014

சாப்பிடுவோமா....சமைக்காத உணவு...

இயற்கை வாழ்வியல் பயிற்சி மையம், பெருகமணி, திருச்சி மாவட்டம் 
கடும் கோடையிலும் கணுக்கால் நனைக்கும் தண்ணீர் ஓடும் நதிக் கரையோரம்....வாழை, மா, பப்பாளி என பலவித பழவாசனையோடு அடர்ந்த நிழல் தரும் மரங்கள். மரங்களுக்கு மத்தியில் சிறிய குடில். இதுதான்...திருச்சி மாவட்டத்தில், காவிரி கரையில் அமைந்த 
பெருகமணியில் இருக்கும் இயற்கை வாழ்வியல் பயிற்சி மையம்.



திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து, கம்பரசம் பேட்டை, முக்கொம்பு வழியாக, கரூர், ஈரோடு செல்லும் மெயின் ரோட்டில் இருந்து இந்த பாலத்தின் வழியாகத்தான் இயற்கை வாழ்வியல் பயிற்சி மையத்திற்கு செல்ல வேண்டும்.


Fr. Jacob

கிறிஸ்தவ அறக்கட்டளையால் நடத்தப் பட்டு வரும் பெருகமணி இயற்கை வாழ்வியல் பயிற்சி மையத்தின் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார் Fr. Jacob. சமைக்காத இயற்கை உணவே மருந்தாகிறது. இதுதவிர மண் குளியல், நீராவி குளியல் ஆகிய மருத்துவ முறைகளும் பின்பற்றப் படுகின்றன. "பஞ்ச பூத சக்திகளும் மருத்துவத்தில் பயன்படுகின்றன" என்கிறார் Fr. Jacob. இங்கேயே தங்கி இயற்கை மருத்துவம் பெரும் வசதி உண்டு. தங்கும் இடத்தின் சூழலே பாதி மருந்தாகி விடும். இதுதவிர, மாதம் ஒருமுறை இரண்டாம் சனிக் கிழமையில் "இயற்கையோடு இணைந்த வாழ்வு" குறித்த ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதற்கான பயிற்சி கட்டணம்  75 ரூபாய்தான். வருடம் ஒருமுறை மே மாதத்தில் ஐந்து நாள் பயிற்சி வகுப்பும் நடத்தப் படுகிறது.



10-05-2014 அன்று நடைபெற்ற பயிற்சி வகுப்புக்கு எனது நண்பர் திரு. கணேசன் என்னை அழைத்துச் சென்றார். முனைவர். வை. குமாரவேல் (சாகாதேவன்) பயிற்சி வகுப்பை நடத்தினார். இயற்கை வாழ்வியல் குறித்த பல புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார் முனைவர். வை. குமாரவேல் (9790120195). பச்சை அரிசி சாப்பாட்டில்தான், புழுங்கல் அரிசியை விட கால்சியம் சத்து அதிகம் உள்ளது என்றார். மலச் சிக்கலும், செரிமான பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக் கொண்டாலே மருத்துவரை அணுக வேண்டிய அவசியம் இருக்காது என்றும் கூறினார். மருந்துகள், மருத்துவர் தேவையில்லாத வாழ்வே நல்வாழ்வு என்பது சுருக்கமாக அவர் சொல்ல விரும்புவது. 


சாப்பாட்டிற்குப் பின் வாழைப் பழம் சாப்பிடுவதை தவிர்த்து, பேரிச்சம் பழம் அல்லது உலர் திராட்சை சாப்பிட்டால் செரிமானத்திற்கு நல்லதாம். 

எண்ணெயில் பொறித்த பதார்த்தங்களுக்கு நூறு சதவீதம் "NO" சொல்ல வேண்டும் என்கிறார். நம் உடலில் செரிமானம் மூன்று நிலைகளில் நடைபெறுகிறது. அவை உமிழ்நீர், இரைப்பை மற்றும் சிறுகுடல் ஆகும். பொதுவாக மாவுப் பொருள்கள் உமிழ்நீரில் செரிமானம் ஆகும். புரோட்டின் பொருள்கள் இரைப்பையில் செரிமானம் ஆகும். ஆனால் எண்ணெயில் பொறித்த பதார்த்தங்கள் சிறுகுடலில்தான் செரிமானம் ஆகும். அதனால் உடலில் ஒருவித மந்த தன்மை (சோர்வு) ஏற்படும். 

உணவை .....இயற்கை உணவு, நயப்படுத்திய உணவு, பதப்படுத்திய உணவு  என மூன்று வகையாக பிரிக்கிறார். சமைக்காத இயற்கை காய் கனிகள் இயற்கை உணவு வகையில் வரும். சமைத்த உணவுகள் நயப் படுத்திய உணவுகளாகும். Fast food, junk food என அழைக்கப் படும் துரித உணவுகள் மூன்றாவது வகையில் வரும். இவை அறவே தவிர்க்கப் பட வேண்டிய உணவுகளாகும்.

பயிற்சி வகுப்பின்போது சில உணவு recipeகளும் சொன்னார்.

உலர் திராட்சையை முதல்நாள் இரவே மூழ்கும் அளவு தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும். காலையில் ஊறிய உலர் திராட்சையுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட வேண்டும். இவ்வாறு  சாப்பிட்டால் மலச் சிக்கல் நம்மை அண்டாது.

கோதுமை தோசைக்கு, பட்டாணி, பாசி பயறு, உருளை கிழங்கு சேர்த்த side dish செய்து சாப்பிடலாம். ஆரோக்கியத்திற்கு உகந்தது.



பயிற்சிக்கு இடையில் காலை பதினோரு மணிக்கு இயற்கை பானகம் தந்தார்கள். சுவை நன்றாக இருந்தது.


சமைக்காத உணவுகள் 

மதிய உணவு இடைவேளையில் சமைக்காத உணவு தந்தார்கள். தர்பூசணி துண்டுகள், நறுக்கிய பச்சை வெண்டைக்காய் துண்டுகள், வெள்ளரி, முள்ளங்கி, கேரட் வில்லைகள், பேரிச்சம் பழங்கள், தேங்காய் பத்தை, தேங்காய் துருவல், முளைகட்டிய வேர்க் கடலை, கார அவல், இனிப்பு அவல், கதம்ப காய்கறிகள் ஆகியவை கொடுத்தார்கள். இவை மட்டுமே மதிய உணவு. சமைத்த உணவு எதுவும் இல்லை. ஆனாலும் வயிறு நிரம்பியது. மாலை வரை பசி உணர்வே இல்லை.


தர்பூசணி, வெண்டைக்காய், கேரட் 
இனிப்பு அவல், கார அவல், கதம்ப காய்கறி 
வெள்ளரி, பேரிச்சை, தேங்காய், முளை கட்டிய வேர்க் கடலை 
மேலே சொன்னவற்றில் .......கதம்ப காய்கறி செய்முறைதான் முக்கியமானது. புடலங்காய், சௌ சௌ, வெள்ளரி, முட்டைகோஸ், கேரட், துருவிய தேங்காய் ஆகியவற்றோடு உப்பு, மிளகு, சீரக தூள், கொத்தமல்லி தழை, கருவேப்பிலை ஆகியவை சேர்த்து செய்கிறார்கள்.

இதில் முக்கிய குறிப்பு, தேங்காய், கேரட் தவிர மற்றவற்றை துருவ கூடாது. அரிய வேண்டும். துருவினால் நீர் விட்டுப் போகும். முடிந்த வரையில் பொடிப் பொடியாக அரிய வேண்டும்.

இனிப்பு அவலில் ஊற வைத்த அவலோடு, பேரிச்சை, முந்திரி, உலர் திராட்சை (அனைத்தும் பொடியாக நறுக்கியது), ஏலக்காய், நாட்டு சக்கரை சேர்க்கிறார்கள்.

கார அவலில், ஊற வைத்த அவலோடு உப்பு, மிளகு, சீரக தூள் சேர்க்கிறார்கள்.



தொடர்புக்கு: Fr. ஜேக்கப், இயற்கை வாழ்வியல் பயிற்சி மையம், பெருகமணி (Post), திருச்சி - 639 115.
தொலைபேசி : 0431-2902961
அலைபேசி : 94431 64945.

No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...