Wednesday 28 August 2013

சமையலறை தோட்டம்....பகுதி-4: மரம் நடுவோம்

தீபக் ராஜா 





இந்த post ல் இடம் பெற்றிருக்கும் படங்களை 
எடுத்தது திரு. தீபக் ராஜா. பொறியியல் முதல் 
ஆண்டு மாணவர். பம்மலில் வசிக்கிறார். 
இவர் எடுக்கும் புகை படங்கள் தொடர்ந்து 
'தலைவாழை விருந்தில்' வெளிவரும்.










பணத்தோட்டம்         Photo: Deepak Raja

விருட்சிபூ                   Photo: Deepak Raja


வாழை                       Photo: Deepak Raja

சூரிய தரிசனம்                                 Photo: Deepak Raja


மனோரஞ்சிதம்   Photo: Deepak Raja


மிளகாய்-காரம் ஜாஸ்தி   Photo: Deepak Raja


சோத்து கத்தாழை   Photo: Deepak Raja


கருவேப்பிலை                        Photo: Deepak Raja
சும்மா....அழகுக்கு   Photo: Deepak Raja

அரளி                      Photo: Deepak Raja


சமையலறை தோட்டத்தில் காய்கறி செடிகள், கீரைகள் மட்டும் தான் பயிர் செய்ய வேண்டும் என்றில்லை. உங்கள் வீட்டை சுற்றி கொஞ்சமே கொஞ்சம் இடம் இருந்தால் போதும். பலவகை மரங்கள் நடலாம். அதிக பராமரிப்பு இன்றியே தொடர் பலனை அறுவடை செய்யலாம். தென்னை, வாழை, முருங்கை, கொய்யா, எலுமிச்சை, சப்போட்டா, மாதுளை, பப்பாளி, கருவேப்பிலை, வேம்பு, மனோரஞ்சிதம்-இவை  அனைத்துமே சமையலறை தோட்டத்திற்கு ஏற்றவை. சமையலுக்கு காய்கள், உடல் நலத்திற்கு பழங்கள், மருந்து பொருளாகும் வேம்பு, பூஜைக்கு மலர்கள்....கைக்கெட்டும் தூரத்தில்.

எங்கோ தொலைவில் அல்ல....சென்னை விமான நிலையத்திற்கு அருகில், நெரிசல் மிகு பம்மலில், இந்த மரங்களை வீட்டை சுற்றி வளர்த்து வருகிறார் என் நண்பர் திரு. கண்ணன். கூடவே சோத்து கத்தாழை (Aloe Vera), மருதாணி, மிளகாய் செடிகள். " இது தவிர தானாக முளைக்கும் 'தப்பு செடிகள்' பல சமயங்களில், களைகளாக இல்லாமல், மூலிகைகளாக அமைந்து விடுவதும் உண்டு"  என்கிறார் அவர். மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கீழாநெல்லியும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் குப்பை மேனி யும் அவர் வீட்டு தோட்டத்தில் உண்டு. மனம் இருந்தால் மார்க்கம்  உண்டு. மரங்களையும், செடிகளையும், மூலிகை பயிர்களையும் நம் வீட்டு உறுப்பினர்களாக நினைத்து பாருங்கள். இருக்கும் சிறிய இடத்தில் தாவரங்களுக்கும் இடம் கொடுங்கள். எதிர்பார்ப்பிற்கும் மேலான பலன் கிட்டும். 

Sunday 25 August 2013

சமையலறை தோட்டம்...பகுதி 3 - ஒரு நாள் பயிற்சி



தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின், தகவல் மற்றும் பயற்சி மையம், சென்னை அண்ணா நகரில் இயங்கி வருகிறது. நகர்புற  தோட்ட வளர்ச்சிக்கான , தகவல் மற்றும் பயிற்சி தருவது இந்த மையத்தின் நோக்கம். நகர்புற தொழில் முனைவோர், பெண்கள், வேலை கிடைக்காத பட்டதாரிகள், சுய உதவி குழு பெண்கள், மாணவர்கள், சேவை அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியோருக்கு பயன்தரும் பயிற்சியளிக்கிறது இந்த மையம். 


சமையலறை தோட்டம், மாடி தோட்டம், மலர் அலங்காரம், வீட்டிற்குள் வளரும் தாவரங்கள் பாதுகாப்பும் பராமரிப்பும், போன்சாய் தாவரம், மண்புழு உர தயாரிப்பு, இயற்கை காய்கறி மற்றும் பழங்கள் பயிரிடுதல், சிறுதானிய உணவு தயாரிப்பு - உள்ளிட்ட 21 தலைப்புகளில் ஒரு நாள் பயிற்சிகள், மாதத்திற்கு ஒரு முறை நடத்தப் படுகின்றன.



பயிற்சி கட்டணம் 400 ரூபாய். மதிய உணவு, தேநீர், சிறுதீனிகள், பயிற்சி கையேடு ஆகியவையும், பயிற்சி நிறைவு சான்றிதழும் வழங்கப் படும்.



இந்த மாத 'சமையலறை தோட்டம்' பயிற்சி, 27-08-2013 செவ்வாய் அன்று நடைபெறுகிறது.

மண்புழு உர  விற்பனையும் செய்கிறது  இந்த மையம். 5 கிலோ மண்புழு உரத்தின் விலை ரூபாய்  60 மட்டுமே.




முகவரி:  

தகவல் மற்றும் பயிற்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம்,
U-30, 10 வது தெரு, அண்ணா நகர்,
சென்னை-40.


ஜெயகோபால் கரோடியா பள்ளி பின்புறம்.

தொடர்பு எண்: 044-26263484



Saturday 24 August 2013

சமையலறை தோட்டம்-பகுதி 2



காலி இடமே இல்லாத நகர வாழ்வில், தோட்டம் அமைக்க வேண்டும் என்று ஆசை. அதுவும் செலவில்லாமல்...

அதற்கான ஒரு திட்ட அறிக்கை:

வீட்டின் குப்பை தொட்டியில் இருந்து துவங்குகிறது நம் திட்டம். ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு குப்பை தொட்டிகள் வேண்டும். பிளாஸ்டிக் கழிவு போன்ற மக்காத குப்பைக்கு ஒன்று. காய்கறி மற்றும் பழ கழிவு, உணவு கழிவு-இவற்றுக்காக மற்றொன்று. அதையும் காசு செலவழித்து வாங்க வேண்டாம். வீட்டில் ஓட்டை, உடைசல் வாளி இருந்தால், அதுவே போதும். மக்கும் கழிவுக்கான குப்பை தொட்டியை balcony யிலோ அல்லது வீட்டிற்கு ஒதுக்குப் புறமான இடத்திலோ வைத்து விடுங்கள். தொட்டியில் ஆங்காங்கே சிறிய துளை இடுங்கள். தொட்டியின் அடியில் சிறிது மணலை நிரப்புங்கள். அதன்மேல்  வீட்டின் காய்கறி, பழம், மற்றும் மீந்து போன உணவு போன்றவற்றை தினமும் கொட்டுங்கள். காய்ந்து போன கருவேப்பிலை, மற்றும் இலை சருகுகள் கிடைத்தால் இந்த உணவு கழிவு மீது போடுங்கள். குப்பை தொட்டியை ஒரு மூடி போட்டு வைத்து விடுங்கள். துளி ஈரம் கழிவின் மீது இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.

மேலே சொன்ன முறையில் கழிவுகளை தினமும் சேகரியுங்கள். தொட்டியை மூடி வைப்பதால் ஏற்படும் வெப்பம், துளைகள் வழியாக செல்லும் காற்று, ஈரப் பதம் இவை கழிவுகளை மக்க செய்யும். தேவைபட்டால், வாரம் ஒருமுறை ஒரு குச்சியால் இந்த கழிவை கிளறி விடலாம். கழிவு மக்க துவங்கியதும் அதன் அளவு (volume ) குறைந்து விடும். எனவே சற்றே பெரிய குப்பை தொட்டி, இரண்டு மாதங்களுக்கு ஒரு சிறிய குடும்பத்தின் கழிவை தாங்கும். இரண்டு மாதங்களில் கழிவு, இயற்கை உரமாக மாறிவிடும்.

உங்கள் சமையலறை தோட்டத்திற்கான உரம் தயார்.

நமது திட்ட அறிக்கையின் இரண்டாம் கட்டம். சமையலறை தோட்டத்திற்கான இடத்தை தெரிவு செய்வது. அந்த இடம் உங்கள் வீட்டின் மொட்டை மாடியாக இருக்கலாம். Balcony யாக இருக்கலாம். ஜன்னல்களாக இருக்கலாம். வீட்டின் சுற்று சுவரை சுற்றி உள்ளே இருக்கும் சிறிய இடமாக இருக்கலாம். Terrace Garden, Roof Garden, Balcony Garden, Window Garden, Vertical Garden, green roof, green wall, living wall , sky farm என்று பலவித பெயர்கள் இன்று புழக்கத்தில் உள்ளன. பெயர் எப்படி இருந்தாலும், விளைவு ஒன்றுதான். ஆரோக்கியமான காய்கறிகள். 

நமது திட்ட அறிக்கையின் மூன்றாம் கட்டம். இடத்தை தெரிவு செய்து விட்டோம். அந்த இடங்களில் ஒரு அங்குல மண் தரை கூட இல்லையே? Concrete Jungle ஆக இருக்கிறதே....கவலை வேண்டாம். உடைந்து போன வாளி, ஓட்டை, உடைசல் பாத்திரம், குப்பையில் எறிய இருக்கும் துணி பை -இவற்றை சேகரித்து கொள்ளுங்கள். அடியில் ஒரு சிறிய துளை இட வேண்டும். அதிக படியான நீர் வெளியேற உதவும். உங்கள் பகுதியில் மண் கிடைத்தால் அதை எடுத்து வந்து, பழைய பாத்திரம் அல்லது பையில் பாதியளவு நிரப்பி கொள்ளுங்கள். கிடைக்க வில்லை என்றாலும் கவலை இல்லை. செம்மண் கிலோ ஐந்து ரூபாய்க்கு கிடைக்கிறது. அதோடு உங்கள் வீட்டில் தயாரான இயற்கை உரத்தை போட்டு நன்கு கலந்து விடுங்கள்.


நமது திட்ட அறிக்கையின் நான்காம் கட்டம். என்ன பயிரிடுவது? கொத்த மல்லி, தக்காளி, மிளகாய், அவரை -இவை எல்லாம் எளிதாக பயிர் செய்ய கூடியவை. வெந்தய கீரை, முளைக் கீரை, பசலை கீரை, மணத்தக்காளி கீரை- இவையும் நமது zero budget kitchen garden க்கு ஏற்றவை. பெரும்பாலான கீரை வகைகளில், முழு கீரை செடியுமே சமையலுக்கு பயன் படுத்த முடியும். குறைந்த இடத்தில் பயிரிட்டாலும் நிறைய அளவு உணவை தருவது கீரைகளே. எனவே, இவை வீட்டு தோட்டத்திற்கு சரியான தெரிவு.

ஐந்தாம் கட்டம். விதை சேகரிப்பு. நீங்கள் சமையலுக்கு உபயோகப் படுத்தும் தக்காளி, மிளகாய் இவற்றை மண்ணில் பிழிந்து விட்டாலே போதும். தனியாக விதை வாங்க தேவையில்லை. மணத்தக்காளி கீரை வாங்கும் போது, சில கீரைகளில் காய், பழங்களும் இருக்கும். அந்த வகை கீரையை தேடி வாங்கி, பழத்தை மண்ணில் பிழிந்து விடலாம். 

ஆறாம் கட்டம். செடிகளில் பூச்சி அண்டாமல் பாதுகாப்பது. மஞ்சள் தூள் அல்லது வேப்ப இலையை அறைத்து, தண்ணீரில் கலந்து, செடிகள் மீது spray செய்தால் போதும். பூச்சி தாக்காது. செடிகளுக்கு அரண் போல் பூண்டு அல்லது வெங்காய செடி வளர்த்தாலும், அவை பூச்சி தாக்குதலில் இருந்து, நம் செடிகளை காப்பாற்றும்.

ஏழாம் கட்டம். நம் வீட்டில் விளைந்த காய்கறிகளை அறுவடை செய்து சாப்பிட வேண்டியதுதான். 

மறக்காமல் என்னையும் சாப்பிட கூப்பிடுங்கள்.

Tuesday 20 August 2013

சமையலறை தோட்டம்

Graphics by Sundarramg




உங்களுக்கு தெரியுமா?

               ஒவ்வொரு February மாதமும், உலக நொறுக்கு தீனி மாதமாக (World Snack Food Month) கொண்டாடப் படுகிறது. நொறுக்கு தீனி சங்கமும் (The Snack Food Association), தேசிய உருளை கிழங்கு வளர்ச்சி நிறுவனமும் (National Potato Promotion Board) இணைந்து கொண்டாடும் " உலக நொறுக்கு தீனி மாதம்"  ,  1989 ல் முதலில் நடைமுறைக்கு வந்தது. பிஸ்கட், குக்கிஸ், உருளை கிழங்கு வறுவல் போன்றவற்றை வியாபாரம் செய்யும் உலகளாவிய 500 வணிக நிறுவனங்களின் கூட்டமைப்பு நொறுக்கு தீனி சங்கம். யாரும் ஒல்லியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்து விடக் கூடாது என்ற நல்லெண்ண அடிப்படையில் துவங்கப் பட்டதுதான் இந்த உலக நொறுக்கு தீனி மாதம். February மாதத்தில் வியாபாரம் 'டல்' லடித்ததை பொறுக்காத பெரு வணிகர்களின் 'ஆடி' கொண்டாட்டம் தான் இந்த " உலக நொறுக்கு தீனி மாதம்" . மேற்கத்திய நாடுகளில் டிசம்பர் முழுவதும் கிறிஸ்துமஸ் விடுமுறை. வாங்கி களைத்த மக்கள், அடுத்து வரும் மாதங்களில் செலவை சுருக்கி விடுவார்கள். இது தான் இந்த February மாத வணிக தந்திரத்தின் காரணம். 

                இதற்கு பதிலடி கொடுக்க கிளம்பியது Kitchen Gardeners International (KGI) அமைப்பு. 2004 முதல், ஒவ்வொரு வருடமும் August மாதத்தின் நான்காம் ஞாயிறு, " உலக சமையலறை தோட்ட தினம்"   ( World Kitchen Garden Day ) ஆக கொண்டாடப் படுகிறது. இந்த வருடம், ஆகஸ்டு 25, World Kitchen Garden Day. நொறுக்கு தீனி சங்கம் போல பணபலம் படைத்த நிறுவனம் அல்ல இது. நல்வாழ்வை நாடும் மக்களின் ஆதரவு தான் இதன் பலம். "தனி மனித முயற்சியில் விளைந்த உணவு தரும் ஆனந்தத்தின் வெளிப்பாடே உலக சமையலறை தோட்ட தினம்.' 

                     அது என்ன 'சமையலறை தோட்டம்?' சமையலுக்கு தேவையான காய்கறி, கீரை, பழ வகைகளை நம் வீட்டிலேயே பயிர் செய்வதுதான் 'சமையலறை தோட்டம்'. Fresh from Garden to Kitchen. 'Oota from thota' என்று கர்நாடகத்துக்காரர் ஒருவர் அழகாக சொன்னார். மொழி பெயர்ப்பு தேவையில்லை என்று நினைக்கிறேன்.

           மலர் வகைகள், புல்வெளிகள் (lawn) இவையெல்லாம் Kitchen Gardenல் சேர்த்தியில்லை. 

              இந்த நடைமுறை நம் சமுதாயத்தில் பல தலைமுறைகளாக வழக்கத்தில் இருந்ததுதான். வீட்டிற்கு பின்னால் கிணறு, வீட்டை சுற்றி தோட்டம்-இவை தான் ஒரு வீட்டிற்கான இலக்கணம். அப்படித்தான் நம் முன்னோர் வாழ்ந்து வந்தனர். இடையில் என்ன ஆயிற்றோ தெரியவில்லை. எல்லாவற்றையும் மறந்தோம். வணிக கலாச்சாரத்தின் கைப்பாவையாகி, நுகர்வோர் என்று அழைக்கப் படுவதில் பெருமிதம் கொண்டோம்.

                         நமக்கு தேவையான காய்கறியை  நாமே  உற்பத்தி செய்வதில் பல நன்மைகள் இருக்கின்றன. உரம் போடாத, பூச்சிக் கொல்லி மருந்தில்லாத ஆரோக்கிய உணவு. புத்தம் புதிய காய்கறியின் சுவை. பொருளாதார சிக்கனம். இதற்கும் மேலாக சுற்று சூழலுக்கும் நன்மை உண்டு. எங்கிருந்தோ கொண்டு வரப் படும் உணவு பொருள் பயணத்திற்கான எரிபொருள் மிச்சம். உலகம் வெப்ப மயமாவதை கொஞ்சம் குறைக்கும் நம் Kitchen Garden முயற்சி. பயிர் செய்வதில்  மனத்திற்கு கிடைக்கும் உற்சாகம், உடலுக்கு கிடைக்கும் பயிற்சி இரண்டும் போனஸ் நன்மைகள்.

                            எப்படி கொண்டாடலாம் உலக சமையலறை தினத்தை?

          உங்கள் விருப்பம்தான். வீட்டு தோட்டம் அமைத்தவர்கள் , நண்பர்களை வீட்டிற்கு அழைத்து, வீட்டில் விளைந்த பொருள்களை கொண்டு விருந்து படைத்து மகிழலாம். இல்லாதவர்கள்  அரை மணி நேரம் அருகில் உள்ள பூங்காவில் இந்த தினத்தை கொண்டாடலாம். வீட்டில் தோட்டம் அமைக்கும் முயற்சியை துவங்கலாம்.

                   காலி இடமே இல்லாத நகரத்து வீட்டில் தோட்டம் அமைப்பது எப்படி? அதுவும் 'zero budget' ல் ? சொல்கிறேன்...அடுத்த post ல்.




Sunday 18 August 2013

தஞ்சாவூர் மெஸ் --கடப்பாவும், ரசவாங்கியும்



தஞ்சாவூர் மெஸ் கடப்பா 


கத்தரிக்காய் ரசவாங்கி -எங்கள் வீட்டில் செய்தது 


                             தஞ்சாவூர்  மெஸ் பற்றியும், கும்பகோணம் கடப்பா பற்றியும், 
நான்,  "   கும்பகோணம் கடப்பா "   postல் எழுதியிருக்கிறேன். இந்த வாரம் தஞ்சாவூர் மெஸ்ஸில் இட்லி கடப்பா சாப்பிட்டேன். MSG Kitchen கடப்பா ஒரு வித ருசி என்றால், தஞ்சாவூர் மெஸ் கடப்பா வேறொரு ரகம். முன்னது பட்டு துணி என்றால், பின்னது பருத்தி துணி. MSG Kitchen கடப்பாவில் உருளை கிழங்கு, வெங்காயம் எதுவும் வாயில் கடிபடாது. அது ஒரு smooth texture. தஞ்சாவூர் மெஸ் கடப்பாவில் உருளை கிழங்கையும் கடித்து ரசிக்கலாம். கொஞ்சம் motta ரகம். தக்காளி, பச்சை பட்டாணி இவற்றையும் சேர்த்து செய்திருந்தார்கள். MSG Kitchenல் கெட்டியாக இருந்த கடப்பா, தஞ்சாவூர் மெஸ்ஸில் தண்ணியாக ஓடியது. ஆனாலும் சொக்க வைக்கும் சுவை. சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, "   சூடான பூரி வேணுமா? " என்று கேட்டுக் கொண்டே,  தட்டு நிறைய பூரிகளுடன் வந்தார் ஒருவர். பெரிய ஹோட்டல்களில் Order கொடுத்து, கை காய காத்திருந்து பழகிய நமக்கு இது வித்தியாசமான அனுபவம் தான்.

             தஞ்சாவூர் மெஸ்ஸின் உரிமையாளர் திரு. R. ராமமூர்த்தி, திருவாரூர் மாவட்டம், கொடவாசல் தாலுகா மஞ்சக்குடியை சேர்ந்தவர். மாம்பலம் பகுதி மேன்ஷன் வாசிகளுக்கும்,குடும்பவாசிகளுக்கும் ,தஞ்சாவூர் மெஸ் ஒரு வரப்பிரசாதம். " இன்று சமைக்க வேண்டுமே" என்று அலுப்பு தோன்றினால் இருக்கவே இருக்கிறது தஞ்சாவூர் மெஸ். " சாதம் மட்டும் வடித்து விட்டோம். வேறு என்ன செய்வது "  என்று தோன்றினால் இங்கே போய் சாம்பாரும், பொரியலும் வாங்கலாம். முட்டைகோஸ் பொரியலும், மோர் குழம்பும் அவ்வளவு ருசியாக இருக்கும். கூட்டு கூட தனியாக கிடைக்கும். இன்றும் வாழை இலையில் பரிமாறும் பாரம்பரியம் இங்கே உண்டு.

         காலையிலும், மாலையிலும் வழக்கமான எல்லா டிபனும் கிடைக்கும். கோதுமை தோசை கூட உண்டு. ஆனால் ஞாயிறு ஒரு சிறப்பு தினம். காலையில் கடப்பாவும், மதியம் ரசவாங்கியும் தஞ்சாவூர் மெஸ்ஸின் star menu. கத்தரிக்காய் ரசவாங்கி, பூசணிக்காய் ரசவாங்கி என்று இரண்டு வகை உண்டு. இரண்டுமே side dish variety தான். ஆனால் அதற்கென ஒரு கூட்டமே உண்டு. லேட்டா போனால் கிடைக்காது.




கடப்பா  recipe தான் முன்னரே  வெளியீட்டு விட்டீர்களே...மீண்டும் ஏன்  என்று நீங்கள் நினைக்கலாம். கடப்பா செய்முறையில்  சில சிறிய வேறுபாடுகள் உண்டு.  ஊர், செய்பவர்  இவற்றிற்கேற்ப  இந்த மாறுபாடுகளை கவனிக்கலாம். எனவே தான்  தஞ்சாவூர் மெஸ்ஸில்  கடப்பா எப்படி செய்கிறார்கள் என்று கொடுத்திருக்கிறேன். 

தஞ்சாவூர் மெஸ் கடப்பா 


தேவையான பொருள்கள் 


பாசி பருப்பு 
உருளை கிழங்கு 
கச கசா 
பச்சை மிளகாய் 
தேங்காய்
இஞ்சி 
பூண்டு 
தக்காளி 
சிறிய வெங்காயம் 
உடைத்த  கடலை (பொட்டு கடலை)
எண்ணெய்-தாளிக்க 
தாளித பொருள்கள்-கிராம்பு, பட்டை, சோம்பு 
எலுமிச்சை பழம்.


பாசி பருப்பும், தேங்காயும் சம அளவில் ஒரு கப் வீதம் எடுத்து கொள்ளவும். இரண்டு பேருக்கு என்றால், மூன்று உருளை கிழங்கு, மூன்று தக்காளி, ஐந்து சிறிய வெங்காயம் போதும். பச்சை மிளகாய் விருப்பத்திற்கேற்ப. மற்ற பொருள்கள் கொஞ்சம் போதும்.

செய்முறை 


பாசி பருப்பை வேக வைத்து கொள்ளவும்.

உருளை கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, உடைத்து வைத்து கொள்ளவும்.

பச்சை மிளகாயை கீறி வைத்து கொள்ளவும்.

இஞ்சி, பூண்டு இரண்டையும் நசுக்கி வைத்து கொள்ளவும்.

தக்காளியை நறுக்கி கொள்ளவும்.

தேங்காய், உடைத்த கடலை, கச கசா மூன்றையும் ஒன்றாக போட்டு, அறைத்து கொள்ளவும்.

சிறிய வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கி, எண்ணெயில் வதக்கி வைத்து கொள்ளவும்.

தாளித பொருள்களை தாளித்து, தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும், தேங்காய், உடைத்த கடலை, கச கசா  அறவை, கீறிய மிளகாய், நசுக்கிய இஞ்சி, பூண்டு, வேக வைத்த பாசி பருப்பு, உடைத்து வைத்த உருளை கிழங்கு, வதக்கிய வெங்காயம்  இவற்றை கொட்டி கொதிக்க விடவும். கொதித்ததும், தக்காளியை போட்டு உடனே இறக்கி விடவும். இல்லை என்றால் நிறம் மாறி விடும்.

இறக்கிய பின்னர், எலுமிச்சம் பழம் பிழிந்து விடவும்.



கத்தரிக்காய் ரசவாங்கி 



தேவையான பொருள்கள் 


கத்தரிக்காய் - 10 to 15
கடலை பருப்பு -  1/2 கப்
தேங்காய் -2 தேக்கரண்டி.
தனியா - 2 தேக்கரண்டி 
புளி - லெமன் சைஸ்
வற்றல் மிளகாய் - 4
மிளகு -ஒரு சிறிய spoon அளவு.
கடுகு, உளுத்தம் பருப்பு, வற்றல் மிளகாய், நல்லெண்ணெய் -தாளிக்க. 


செய்முறை 





ரசவாங்கி பொடி 

ரசவாங்கி 





தேங்காய், வற்றல் மிளகாய், மிளகு மூன்றையும் வறுத்து அறைத்து கொள்ளவும்.

கடலை பருப்பை வேக வைத்து கொள்ளவும்.

பின்னர், கத்தரிகாயை நறுக்கி, லேசாக வதக்கி புளி ஜலத்தில்  வேக வைக்கவும்.

வேக வைத்த கத்தரிக்காயுடுடன், வேக வைத்த கடலை பருப்பு, வறுத்து அறைத்த பொடி இவற்றை போட்டு, கொதிக்க விடவும். கொதித்ததும், தாளிக்க வேண்டிய பொருள்களை தாளித்து கொட்டி இறக்கவும். தேவை பட்டால் ஒரு பச்சை மிளகாய் கீறி சேர்த்து கொள்ளலாம்.

பூசணிக்காய் ரசவாங்கி 


மேலே குறிப்பிட்ட அதே முறையில், கத்தரிக்காய்க்கு பதில், வெள்ளை பூசணிக்காய் போட்டு சமைக்கவும். கடலை பருப்புக்கு பதிலாக ஊறவைத்த பச்சை நிலக்கடலையையும் பயனபடுத்தலாம்.

தஞ்சாவூர் மெஸ்,   மேற்கு மாம்பலம் சுப்பா ரெட்டி தெருவில் உள்ளது. தியாகராய நகர் டெர்மினஸ் அருகில் உள்ள மேட்லி சப்வே இறங்கி ஏறினால் காசி விசுவநாதர்  கோயில். தாண்டியதும் சங்கர மடம் வரும் அதன் பின்னால் உள்ள சிறிய சந்தில் சென்றால் சுப்பா ரெட்டி தெரு வரும். எல்லையம்மன் கோயில் தெரு வழியாக சென்றால் முதல் வலது சந்து சுப்பா ரெட்டி தெரு .   

                                   


Wednesday 14 August 2013

உணவு சுதந்திரம்?

A Guest Post by Srividya Raman:

சுதந்திர தின Graphics by Sundarramg
Old is gold  என்பார்கள். எனக்கென்னவோ  இது நம்முடைய உணவுக்காகவே  சொல்லப்பட்டதோ என்று தோன்றுகிறது. உலகிலேயே இயற்கையோடு இணைந்து வாழ்ந்தது தமிழன்தான் என்று  அடித்து சொல்வேன்.  

காலநிலை மாறுதலுக்கேற்ப  உணவுகளை  உண்டு, " நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்று வாழ்ந்தவன் தமிழன்.  அரிசி சற்று குளுமை அளிக்கும் உணவு. நம் தமிழகம் வெப்ப பிரதேசம்.  அதனால்  தமிழனின்  உணவு பெரும்பாலும் குளுமை அளிப்பதாகவே இருக்கும். கோதுமை சற்று சூடு கொடுக்கும் உணவு. வட மாநிலங்களில் உள்ள குளிருக்கு அதுதான் சரி. நல்ல வெய்யிலில் ,  வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று சப்பாத்தி, பூரி, Bread, பரோட்டா என்று தின்றுவிட்டு பேதி பிடுங்கி கொண்டு போனால் 'ஐயோ அம்மா '  என்று கூக்குரல் இடுவதுதான் உணவு சுதந்திரமா?

ஒவ்வொரு seasonஇலும் ஒவ்வொரு வகையான உணவை உண்டவன் தமிழன். சித்திரை,  வைகாசியில். மாவும் பலாவும் உண்டு சீரணத்தை செழிப்பாக்கினான். சித்திரை முதல் நாளில் வேப்பம்பூ மாங்காய்  பச்சடி சாப்பிட்டு வருடத்தை துவக்கினான்.  ஆடி மாதம் முதல் நாள்  தேங்காய்  ஏதோ  ஒரு விதத்தில் சேர்க்கபடுகிறது.  சேலம்  பகுதிகளில் தேங்காயை சுட்டு சாப்பிடுவார்கள். காத்தடி காலம் என்பதால்  தலை சுற்றல் வராமல் இருக்க தேங்காயை சேர்த்து கொள்வார்கள்.  ஆடி 18 அன்று கலந்த சாதவகைகளை சாப்பிட்டு மகிழ்வார்கள். புளி உபயோகத்தை குறைப்பார்கள். 

"புரட்டாசி மாதம்  பகல் ஆனால் பொன்னுருக காயும்,  இரவானால் மண்ணுருக பெய்யும்"  என்பார்கள். இது போன்ற நேரங்களில் மனிதனுக்கு நிறைய தேவை  protein அதற்காகவே வந்ததுதான் நவராத்திரி. ஒன்பது  நாளும் வித விதமான சுண்டல்களை தின்று தீர்த்தார்கள்.  

ஐப்பசி மாதம்  பொதுவாகவே சிறு  பூச்சிகள்  பெருகும் காலம்  அவற்றை கட்டுப்படுத்தவே பட்டாசு வெடித்தார்கள். மழை தொடங்கி சற்றே குளிர் தொடங்கும். அதனால்தான்  நிறைய ஓமம், மிளகு சேர்த்த பட்சணங்களை செய்து சாப்பிட்டு சீரண சக்தியை தூண்டினார்கள். 

கார்த்திகை மாதம் முழுவதும் வீட்டு வாசலில் விளக்கேற்றி வைத்து  பூச்சி  முதலிய ஜந்துக்கள்  வீடுகளுக்குள் வராமல் தடுத்தார்கள். அது மட்டுமின்றி  பொரி பொரிக்கும்போது வரும் புகை, பறந்து வரும் பூச்சிகளை தடுக்கும்.   

மார்கழி முன்பனிக்காலம்.  சுலபமாக செரிப்பதற்காகவே  படைக்கப்பட்ட உணவு பொங்கல். அதில் உள்ள மிளகும் சீரகமும் சளி பிடிக்காமல் தடுக்கும். மார்கழி மாதத்தில் Ozone layer பூமிக்கு அருகில் வருகிறது.  விடியற்காலையில் வீட்டிற்கு வெளியே சென்று உலாவினால் நல்லது. சொன்னால் செய்வோமா?. அதற்காகவே வந்தது மார்கழி பஜனை.  பஜனை பாடி பொங்கலை சாப்பிட்டு  வந்ததில் மார்கழி  மகிழ்ச்சியாகவே கழிந்தது.  

தை மாதம் பின்பனி காலம். நினைத்து, நினைத்து சர்க்கரை பொங்கல் செய்வார்கள். பொங்கல் திருநாள் அன்று மட்டும் அல்ல. ரத சப்தமி யிலும்  சர்க்கரை பொங்கல் உண்டு. அதில் சேரும் நெய்  குளிரினால் வரும் வயிற்று வறட்சியை போக்கும். இந்த கால கட்டங்களில்    உணவில் நிறைய காய்கறிகளை சேர்ப்பார்கள். ஒரு கோடையை எதிர் கொண்டாக வேண்டுமே.  இப்படி அரிசியும் அதனை சார்ந்த பொருள்களுமாக சாப்பிட்டு வாழ்ந்தவன் தமிழன். 

இன்று " நான் அரிசியை தொடுவதேயில்லை"   என்று சொல்லிக்கொள்வது ஒரு fashion.  அரிசியும் மற்ற சிறு தானியங்களும்  சாப்பிட்டு வாழ்ந்தவரெல்லாம்  ஆரோக்கியம்  கெடாமல் வாழ்ந்தார்கள். பிட்சா burger என்று  சாப்பிட்டுவிட்டு வியாதிகளில் உழன்று கொண்டிருப்பவன்தான்  இன்றைய  தமிழன் . பெரிய பன்னாட்டு கம்பெனிகள் இங்குள்ள இளைஞர்களுக்கு வேலையையும் கொடுத்து சம்பளத்தையும் கொடுத்து பின் அவற்றை பிடுங்கி செல்ல பிட்சா, burger கடைகளையும் அனுப்பி விட்டனரோ என்று தோன்றுகிறது. இன்னும் தெளிவாக சொன்னால் 2025ல்  இந்தியாவில் மட்டும்தான்  5௦ சதவிகிதத்திற்கு மேல் இளைஞர்கள் இருப்பார்கள் என்று கணித்திருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரையும் நோயாளிகளாக ஆக்கிவிட செய்யப்பட்ட சதியோ என்று கூட தோன்றுகிறது.  நோயாளி நாடு வல்லரசு ஆவது எப்படி?.  

புத்தியோடு பிழைக்க வேண்டும் என்ற வேண்டுதல்களுடன் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

Sunday 11 August 2013

கம்பு வெல்ல கொழுக்கட்டை

திரு. கண்ணன் 
எனது நண்பர் திரு. கண்ணன் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். ராமநாதபுரம் அருகில் உள்ள அச்சுந்தன் வயல் கிராமத்திலிருந்து சென்னை வந்து settle ஆனவர். தன் கிராமத்து உணவு வழக்கம் பற்றி நிறைய பேசுவார். கம்பு, வரகு போன்ற தானிய உணவுகளை கிராமத்து மக்கள் விரும்பி உட்கொண்டதில் துவங்கி........ இன்று அதே கிராமத்து மக்கள், தம் வயலில் விளைந்த தானியங்களை விற்று விட்டு, அரிசி வாங்கி சாப்பிடுவது வரை......... ஏராளமான செய்திகள் அவர் பேச்சிலிருந்து கிடைக்கும். அவருடன் ஒரு மணி நேரம் பேசி விட்டு பார்த்தால், வயக்காட்டு சேறு நம் காலை நனைத்திருக்கும். சென்னையிலிருந்து நம் மனம் வெகு தொலைவு சென்றிருக்கும்.  

அவர் சொன்ன recipe கம்பு வெல்ல  கொழுக்கட்டை. திரு. கண்ணனின் உணவு குறிப்புகளை இனி அடிக்கடி  தருவேன். 

கம்பு  வெல்ல  கொழுக்கட்டை 


தேவையான பொருள்கள் 


கம்பு 


பாசி பருப்பு 




ஏலக்காய்



தேங்காய் 



தேங்காய் துருவல் 




வெல்லம் 

கம்பு -150 கிராம்.
பாசி பருப்பு -75 கிராம்.
ஒரு சிறிய தேங்காய் மூடி -துருவியது .
வெல்லம் -துருவியது -125 கிராம்.
ஏலக்காய் -4

செய்முறை 


கம்பு தானியத்தை மூழ்குமளவு தண்ணீரில் போட்டு, இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியவுடன், கைகளால் நன்கு அலசி தண்ணீரை வடிக்கவும். கம்பு தானியத்தில் உள்ள உமி நீங்கும் வரை  ( மூன்று அல்லது நான்கு முறை) தண்ணீர் விட்டு அலசவும். தண்ணீரை வடித்த பின், கம்பு தானியத்தை சிறிது நேரம் உலற விடவும். நன்கு உலர்ந்த பின், வாணலியில் போட்டு வறுக்கவும். கம்பு லேசாக சிவக்க துவங்கும். ஒன்றிரண்டு கம்பு பொறிய ஆரம்பிக்கும். அப்போது வறுப்பதை நிறுத்தி, ஒரு பாத்திரத்தில் கொட்டி, ஆற விடவும்.

பாசி  பருப்பை சிவக்கும் வரை வறுக்கவும். வறுத்த பாசி பருப்பையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற விடவும்.

ஏலக்காயை லேசாக வறுக்கவும்.

வறுத்த கம்பு, பாசி பருப்பு, ஏலக்காய் மூன்றையும் மிக்சியில் போட்டு நன்கு அறைக்கவும். 

அறைத்த மாவுடன் தேங்காய் துருவல், வெல்லம் துருவல் இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும். பத்து நிமிடம் கழித்து மாவை உருண்டைகளாக பிடிக்கவும். தண்ணீர் விட தேவையில்லை. வெல்லம் கலந்து பத்து நிமிட நேரத்தில் வெல்லத்திலிருந்து நீர் கசிய துவங்கும். இந்த நீரே உருண்டையாக பிடிக்க போதுமானது.

பிடித்த உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து, பத்து பதினைந்து நிமிட நேரம் நீராவியில் வேக விடவும்.

சுவையான, ஆரோக்கியமான கம்பு  வெல்ல  கொழுக்கட்டை தயார்.

நான் organic வெல்லம் மட்டுமே பயன் படுத்துகிறேன். காரணம் organic வெல்லம் சுத்தமாக இருக்கிறது. சாதாரண வெல்லத்தை நீரில் கரைத்து, அதில் கலந்துள்ள தூசிகளை வடிகட்டுவார்கள். Organic வெல்லத்தில் அந்த வேலையில்லை. இனிப்பு சுவையும் சரியாக இருக்கிறது. படத்தில் காட்டியுள்ள வெல்லம் மைலாப்பூர் Sunday Shandy யில் வாங்கியது. கம்பு  Adyar Restore ல் வாங்கியது.

 வறுத்த கம்பு+பாசி பருப்பு+
ஏலக்காய் மாவு 

கம்பு கொழுக்கட்டை
வேக வைக்கு முன் 

Thursday 8 August 2013

தலைவாழை விருந்து 25: வாழ்த்துக்கள்

A 'guest post' by Sundarramg:

You have done a great work by climbing to the 25th rung in your blogspot.  I have no words to express my happiness and praise your work.  But I could exhibit the same through a graphic I created.


Thursday 1 August 2013

அரிசி வடை





திருமதி. சத்தியபாமா, ஸ்ரீரங்கம் 

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் சில உணவு வகைகள்  பிரபலமாயிருக்கும். சில உணவு வகைகள் குறிப்பிட்ட சமூகத்தினரின் சிறப்பு உணவாயிருக்கும். இன்னும் சில உணவு வகைகள், குறிப்பிட்ட குடும்பங்களில் மட்டும் வழங்கி வந்திருக்கும். நான் கேள்வியே  பட்டிராத ஓர் உணவு, அரிசி வடை. என் மனைவியின் அம்மா வழி பாட்டி, திருமதி. சத்தியபாமா தன்           வீட்டில் அடிக்கடி பிரியமுடன் செய்து வந்த உணவு. ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்தவர்.அவர் வீட்டிற்கு சென்றால், எந்த நேரமானாலும் உடனடி டிபன் ஏதாவது செய்து தருவார். அவசரத்தில் செய்தாலும் சுவையில் குறையிருக்காது.  அவர் உள்ளன்புடன் செய்து தந்த அரிசி வடை, இன்னமும் அவர்தம் பேத்திகளின் மனதில் சுவை மணக்க வாழ்கிறது. நாம் வழக்கமாக செய்யும் வடையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சுவை. தலைவாழை விருந்தின் 25வது போஸ்ட் . திருமதி. சத்தியபாமாவுக்கு சமர்ப்பணம்.



        
        அன்பு, பாசம்--ஒரு கூடை நிறைய                            


புழுங்கல் அரிசியை புளித்த தயிரில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தேங்காய், வர மிளகாய், பெருங்காயம், உப்பு  இவற்றுடன், தயிரில் ஊறிய அரிசியை சேர்த்து, தண்ணீர் விடாமல் கெட்டியாக அறைக்க வேண்டும். இலையில் தட்டி, ஒவ்வோன்றாக எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்க வேண்டும்.  மிதமான தீயில் பொறித்து எடுப்பது முக்கியம். விருப்பப் பட்டால், அறைத்த மாவில், கருவேப்பிலை  சேர்க்கலாம்.


இலையில் சிறிது எண்ணெய் தடவி வடையாக தட்டவும்
+ 

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...