Thursday 31 October 2013

டம...டம...டம...டமார்!




அப்போது தெரியாது பட்டாசு தயாரிப்பிற்கு பின்னால் இத்தனை உயிர் பலிகள் இருக்கின்றன என்று.

அப்போது தெரியாது தமிழ்நாட்டில் நடக்கும் தீ விபத்துகளில் 4 சதவீதம் பட்டாசு விபத்துகள் தான் என்று.

பட்டாசு விபத்தில் கண்ணிழந்த குழந்தைகள், கையிழந்த பெரியவர்கள், கருகிய முகங்கள், பறிபோன உயிர்கள் - இப்படி எதையுமே நேரில் பார்த்ததில்லை.

அப்போது தெரியாது, நம்மூர் சிவகாசியில் பட்டாசு தயாரிப்பது ஒரு நூற்றாண்டுக்குள் துவங்கியதுதான் என்று. என்னவோ நரகாசுரன் இறந்த அடுத்தநாளே சிவகாசியில் பட்டாசு தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்ற ரேஞ்சுக்குதான் எனது பொது அறிவு இருந்தது.

உலக அளவில் பட்டாசு தயாரிப்பின் தாயகம் சீனாதான். மூங்கில் மரம் முற்றி வெடிக்கும்போது ஏற்பட்ட சத்தம்தான் பட்டாசு கண்டுபிடிப்பிற்கான இன்ஸ்பிரேசன்.


1923ம் வருடம் முதன் முதலில் சிவகாசியில் பட்டாசு தொழில் துவங்கியது. வறண்ட பூமியும், அதனால் இருண்ட வாழ்க்கையும் பட்டாசு தொழிலை இருகரம் நீட்டி அரவணைத்தன. அச்சுத் தொழில், பட்டாசு தொழில், தீப்பெட்டி தயாரிப்பு-இவை மூன்றும் சிவகாசியின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமான தொழில்கள்.

குழந்தை தொழிலாளர், போதிய பயிற்சியில்லாத தொழிலாளர்கள், குறுகிய இடத்தில் அடைபட்டு பட்டாசு தயாரிக்கும் அவலம், அதனாலேயே ஏற்படும் விபத்துக்கள், சிறிய இடத்தில் நிறைய பேர் வேலை செய்வதால் விபத்தின் போது ஏற்படும் அதிக உயிரிழப்பு - மூன்று வேலை உணவுக்காக உயிரை கொடுக்கும் பரிதாப கதைகள் இவை.

கடந்த வருடம் ஏற்பட்ட, 40 பேரை பலி வாங்கிய சிவகாசி தீவிபத்திற்கு பிறகு சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். அடிக்கடி நடக்கும் பாதுகாப்பு பரிசோதனைகளும், விழிப்புணர்வு முகாம்களும் இந்த வருடம் விபத்து எண்ணிக்கையை குறைத்திருக்கிறதாம். இந்த வருடம் நான்கு விபத்துகளும், 14 உயிர்பலிகளும் மட்டுமே நிகழ்ந்திருக்கின்றனவாம்.


வருடத்தில் பதினோரு மாதங்கள் சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் உழைக்கிறார்கள். தீபாவளியை ஒட்டி 20 நாள் விடுமுறை. நவம்பர் 15 லிருந்து2014 தீபாவளி பட்டாசு தயாரிப்பு துவங்கி விடும். தீபாவளி விடுமுறையில் செல்லும் போதே அடுத்த வருட சம்பளத்தில் இருந்து advance வாங்கி விடுகிறார்கள். நெருப்போடு விளையாட வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு.

பட்டாசு தயாரிக்கும் இடத்தில்தான் இப்படி என்றால், பயன்படுத்துவோர் பலரும்கூட பலியாகிறார்கள். தீபாவளி சீசனில் தமிழ்நாடு தீயணைப்பு துறையும், அரசு மருத்துவ மனைகளின் தீக்காய சிகிச்சை பிரிவும் 24 மணி நேரமும் ஓயாது இயங்க வேண்டி உள்ளது. தீக்காய சிகிச்சை பெறுவோரில் 95 சதவீதம் குழந்தைகள் தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.


பட்டாசு விபத்துகளை தவிர்ப்பது எப்படி?

குறுகிய தெருக்களிலும், மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியிலும் வெடி வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பரந்த மைதானங்களில் வெடிப்பது பாதுகாப்பானது.

குடிசைகள், கூரை வேய்ந்த வீடுகள் அருகில் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

வெடிக்கும் இடத்தில் மீதமுள்ள வெடிகளை குவித்து வைப்பது ஆபத்தானது.

குழந்தைகள் தனியாக வெடிக்க அனுமதிக்காதீர்கள். பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம்.

பட்டாசு வெடிக்கும் இடத்திற்கு அருகில், ஒரு பக்கெட் நிறைய நீர் நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். தீ விபத்து நேரிட்டால் முதல் உதவிக்கு அந்த நீர் உதவும்.

இறுக்கமான உடை அணிந்து பட்டாசு வெடியுங்கள். தொள, தொள ஆடைகள் வேண்டாம்.

பருத்தி உடைகளை மட்டுமே அணியுங்கள். செயற்கை இழை ஆடைகள் வேண்டவே வேண்டாம்.


கையில் பட்டாசை வைத்து கொளுத்தி போடும் ஹீரோயிசம் வேண்டாமே.



பாட்டில், சிறு பெட்டிகள்  போன்றவற்றில், வெடியை திணித்து வெடிக்கிறார்கள் சிலர். அதிக சத்தம் வருமாம். சத்தம் வருதோ இல்லையோ ஆபத்து இதில் நிச்சயம்.



அடுத்தவர் வீட்டை குறி வைத்து ராக்கெட் விட வேண்டாமே. தீபாவளி அன்று ரோட்டில் நடக்கவே முடியவில்லை. எங்கிருந்தோ ஒரு ராக்கெட் நம்மை குறிவைத்து சீறி வருகிறது. இல்லை என்றால் யாராவது ஒருவர் ஊசி வேடியையாவது நம் மேல் தூக்கி போடுகிறார். வேண்டும் என்று செய்வதில்லை. பண்டிகை பரபரப்பில் ஏற்படும் கவனக் குறைவு.

முக்கியமாக தீக்காயம் ஏற்பட்டால், காயம் பட்டவரை துணியால் போர்த்தக் கூடாது. காயம் பட்ட இடத்தில் குளிர்ந்த நீர் ஊற்றுங்கள். இது முதல் உதவிதான். உடனே மருத்துமனைக்கு அழைத்து செல்லுங்கள்.

அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் மருத்துவர்கள் 24 மணி நேரமும் தயாராக இருக்கிறார்கள். தீவிர தீக்காயத்திற்கு பெரிய மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுவதே நல்லது. இந்த விஷயத்தில் அரசு மருத்துவ மனைகளின் சேவை சிறப்பாகவே இருக்கிறது.

கண்களில் ஏற்படும் தீக்காயம் தீபாவளி நேரத்து விபத்துகளில் குறிப்பிடத் தக்கது. சென்னையை பொறுத்தவரை எக்மோரில் உள்ள அரசு கண் மருத்துவ மனை அவசர கால கண் சிகிச்சைக்கு சிறந்த இடம்.(044 - 2855 5281).

தீபாவளி நேரத்தில் பட்டாசு விபத்துகளை விட அதிகமாக தெருக்களில் நிகழும் வாகன விபத்துக்களை குறிப்பிடுகிறார்கள், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள். கடந்த வருட தீபாவளி அன்று ஒருநாள் மட்டும், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு , 807  வாகன விபத்து அழைப்புகள் வந்திருக்கின்றன.  அதே நேரம், அதே நாளில்,  பட்டாசு விபத்து தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு வந்த அழைப்புகள் 56 தானாம். இந்த விபத்துக்களில் பெரும்பான்மை குடிபோதையில் நிகழ்ந்தவையாம்.

சென்னையை பொறுத்தவரை அவசர கால தொலைபேசி அழைப்புக்கான எண்களை அறிய இந்த இணைப்பு உதவும். மற்ற மாவட்டங்களில் தீயணைப்பு துறை தொடர்புக்கு இந்த இணைப்பு உதவக் கூடும்.

தீ  விபத்து ஏற்பட்டால் தொடர்பு கொள்ள  வேண்டிய  எண்கள்  101, 102.

உங்கள் வீட்டிற்கு அருகே உள்ள தீயணைப்பு நிலைய தொலைபேசி எண்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

தீயணைப்பு துறையினரும், 108 ஆம்புலன்சும், சென்னை நகர் முழுக்க பல இடங்களில் வாகனங்களை நிறுத்தி வைத்து, தயாராக இருக்கிறார்கள். அவசர உதவிக்கு அழைப்பதில் தாமதம் வேண்டாம்.

சென்னை அகர்வால் கண் மருத்துவமனை, பட்டாசு விபத்தினால் கண்களில் ஏற்படும் காயங்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பதாக அறிவித்திருக்கிறது. 
தொடர்பு எண்கள்:     044 33008800, 044 28112811. 
முகவரி: 19,  கதீட்ரல் சாலை, சென்னை.  

Wednesday 30 October 2013

தீபாவளி...... சில நினைவுகள்



நகரத்துவாசிகளுக்கு தீபாவளி மிக முக்கியமான பண்டிகை. பொங்கல் பண்டிகை கிராமங்களில் களை கட்டும். நகரத்திலேயே பிறந்து வளர்ந்த என்னை போன்ற அதிர்ஷ்ட கட்டைகளுக்கு பொங்கலை விட தீபாவளிதான் பிடிக்கும். சாமி கும்பிட்டு, சர்க்கரை பொங்கலும், வெண் பொங்கலும் சாப்பிட்டால் முடிந்தது பொங்கல் பண்டிகை. 

தீபாவளி அப்படி இல்லை. விடியற்காலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து....இவையெல்லாம் காலை 5 மணிக்குள் முடிந்துவிடும். அப்புறம் அம்மா செய்து வைத்திருக்கும் பட்சணங்களை ஒரு பிடி பிடித்து....ஏழு மணிக்கு நண்பர்களை தேடி கிளம்பி விடுவோம். அவர்கள் வீட்டு பட்சணங்ங்களையும் ஒரு பிடி பிடிப்போம். தீபாவளியை ஓர் உணவு பண்டிகை என்றே சொல்லலாம்.

ஒரு மாதம் முன்னாலேயே தீபாவளியை வரவேற்க தயாராகிவிடுவோம். அரிசி, பருப்பு, வெல்லம் எல்லாம் வாங்கி சுத்தப் படுத்த துவங்கி விடுவார்கள். தீபாவளிக்கு பத்து நாள் இருக்கும்போதே அரிசி , பருப்பெல்லாம் மாவு மில்லுக்கு சென்று, மாவாகி திரும்பி இருக்கும். ஒரு வாரம் முன்னாலே வீட்டில் எண்ணெய் வாசம் சூழ்ந்திருக்கும்.

கெட்டி உருண்டை (அல்லது பொரிவிளங்கா உருண்டை), மைசூர் பாக், குஞ்சாலாடு (அட...லட்டுதாங்க), பாதுஷா, பயத்தமாவு உருண்டை, ஓமபொடி, மனங்கொம்பு (முள்ளு முறுக்கு என்றும் சொல்லலாம்), தேன்குழல், மிக்சர் - இவை எங்கள் வீட்டு தீபாவளி பலகாரங்கள். ஓம பொடியை பற்றி சொல்லியே ஆக வேண்டும். இன்றைக்கு கடைகளில் கிடைக்கும் ஓம பொடிகளில்  பெயரில் மட்டுமே ஓமம் இருக்கும். மற்றபடி அவை கடலைமாவு பொடிகள்தான். நிறைய ஓமம் போட்டு, காரமாக, கர கரவென்று இருக்கும் ஓமபொடி. தொந்தரவு தராமல் ஜீரணமாகும்.

தீபாவளிக்கு கங்கா ஸ்நானம் செய்யும் வரை பட்சணங்கள் செய்து கொண்டிருப்பார் அம்மா. ஒரு வாரத்து எண்ணெய் புகை தாங்காமல், தீபாவளியன்று மதியம் அவருக்கு காய்ச்சல் வந்து விடும்.


தீபாவளி முடிந்து ஒரு மாதம் வரை வீட்டில் பட்சணங்கள் ஸ்டாக் இருக்கும். ஒருமாதம் வரை துளியும் கெடாது. தீரப் போகும் தருணத்தில் ஏக்கமாக இருக்கும். இனி அடுத்த தீபாவளிக்குதானே என்று மனம் நினைக்கும். கடைசி பட்சண டப்பா காலியாகி, ஆச்சு...என்று டப்பாவை தூக்கி போடுவேன். அடுத்தநாள் surprise ஆக ஒரு சிறிய டப்பாவை release செய்வார் அம்மா. அப்போது கிடைக்கும் ஆனந்தம் இருக்கிறதே! அப்பப்பா அதை சொல்ல முடியாது.

திருச்சி டவுன்ஹாலில் தீபாவளிக்கென்று temporary ஜவுளி கடைகள் போட்டிருப்பார்கள். சுற்று வட்டாரத்து மில்களில் இருந்து துணி வகைகள் வந்து குவிந்திருக்கும். தீபாவளிக்கு முதல் நாள் இரவு முழுக்க துணிகள் வாங்குவோம். நேரம் ஆக ஆக விலை குறையும். தீபாவளி அன்று மீதம் இருப்பதை அடிமாட்டு ரேட்டுக்கு தள்ளி விட்டு போவார்கள். இன்று திருச்சி சென்றால் கூட, தீபாவளி சீசன் கடைகளை நீங்கள் பார்க்கலாம்.

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், அடையார் ஆனந்த பவன்-இவையெல்லாம் வந்திராத காலம் அது. ஓட்டல்களில் கூட அல்வாவும், மைசூர் பாக்கும் தான் கிடைக்கும். அதுவும் சுட...சுட கிடைக்காது.

அதனால் தீபாவளி பட்சணத்திற்கு ஓர் ஈர்ப்பு இருந்தது.

வீட்டிற்கு வீடு பட்சணம் செய்யும் முறை மாறும். சுவையும் மாறும். பட்சணம் செய்வோரின் கைமணம் என்பார்கள். ஊருக்கு ஒரு சுவை இருந்தது. அது காவிரி தண்ணீரும், தாமிரபரணி நீரும், சிறுவாணி ஆறும் தந்த அற்புத சுவைகள். வருடத்திற்கு ஒருமுறைதான் அளவில்லா ஆனந்தம் என்பதால், சர்க்கரை நோயும் நம்மை தாக்காமல் இருந்தது.

தலை தீபாவளி மாப்பிள்ளைக்கு, மைசூர் பாக்கை உடைக்க சுத்தியல் தருவதில் தொடங்கி, கெட்டி உருண்டை விழுந்து கால் உடைந்தது, மனைவி செய்த அல்வாவை சாப்பிட்ட கணவன் வாய் திறக்க முடியாமல் ஒட்டிக் கொண்டது வரை ஜோக்குகள் தீபாவளி மலர்களில் களை கட்டும்.

திரும்பும் இடத்தில் எல்லாம் sweet stall, தினமும் வாங்கி குவிக்கும் புத்தாடைகள், corporate உணவகங்கள்.... இவை நம்மை நிறையவே மாற்றி விட்டன. தினந்தோறும் தீபாவளிதான் என்கிறபோது, தீபாவளி தினத்திற்கு என்று எதை மிச்சம் வைத்திருக்கிறோம்? எல்லாம் இருக்கிறது...ஆனால் எதுவுமே இல்லை.


Tuesday 29 October 2013

குப்பைமேனி தைலம்

குப்பைமேனி தைலம்                                                                                                         PHOTO: Raman

குப்பை மேட்டில் கூட முளைத்து நிற்கும் செடி குப்பைமேனி. நாம் நடந்து செல்லும் ரோட்டில், கடந்து செல்லும் பாதையில் என எங்கும் காணப் பட்டாலும், நாம் காணாது கடந்து விடுவோம் குப்பைமேனியை. காரணம் இதன் அருமை நமக்கு தெரியாது. என் அம்மாவிற்கு தெரிந்திருந்தது. வீட்டை சுற்றி முளைத்திருக்கும், குப்பைமேனி இலைகளை பறித்து பொரியல் போல் செய்வார். மிக நன்றாக இருக்கும்.

விதைக்க வேண்டாம். உரம் போட வேண்டாம். சிறிய மண் பரப்பு இருந்தால் போதும். தானே தழைத்து நிற்கும் சுயம்பு இந்த குப்பைமேனி. Antibiotic Properties கொண்டது குப்பைமேனி. பலவித infectionலிருந்து நம்மை காக்கும். இதில் உள்ள anti inflammatory properties வீக்கத்தை குறைக்கும்.

இவை எல்லாம் தெரிந்தும், ஏனோ குப்பைமேனியை பயன்படுத்தாமலே இருந்தேன். திருச்சியில் இருக்கும் என் நெருங்கிய நண்பர் திரு. மீனாட்சி சுந்தரம் அவர்களின்  மனைவி திருமதி. ஸ்ரீவித்யா ஒருநாள் சொன்னார், " குப்பைமேனி தைலம் காய்ச்சியிருக்கிறேன்" என்று.

Over to Smt. Srividhya:

" எதற்கு இந்த தைலம்?"

" தோலில் ஏற்படும் பலவித பிரச்சினைகளுக்கு சிறந்த மருந்து குப்பைமேனி தைலம்."

Eczema எனப்படும் ஒருவகை தோல் நோய், சிறு குழந்தைகளுக்கு வரும் கரப்பான், தோலில் ஏற்படும் அரிப்பு, சிறு சிறு வெட்டு காயங்கள், bedsoreஇவைகளுக்கு சரியான தீர்வு குப்பைமேனி தைலம். பிரச்சினை உள்ள பகுதியில் இந்த தைலத்தை லேசாக தடவ வேண்டும். இரவு படுக்க போகும் முன் இந்த தைலத்தை உபயோகிக்கலாம். காலை குளிக்க போகுமுன் சிறிது விளக்கெண்ணெய் அல்லது குளித்த பின் moisturizing cream தடவினால் நல்லது. இவ்வாறு பதினைந்து நாள் செய்தால் போதும். " Skin பிராப்ளமா? எனக்கா?" என்று கேட்பீர்கள்.

குப்பைமேனி  மூட்டு வலியை  கூட குறைக்கும். தோல் பொலிவை கூட்டும்.

குப்பைமேனி   இன்னமும் பல வியாதிகளை குணப் படுத்தக் கூடியது.


குப்பைமேனி செடி PHOTO: Sundarramg


குப்பைமேனி செடி 
(விதை மற்றும் இலை அமைப்பை அறிய  இந்த படம் உதவும்)

இப்படித்தான் இருக்கும் குப்பைமேனி செடி. இதன் இலைகளின் shape தனித்துவமானது. கூர்மையான நுனி பகுதியை கொண்டிருக்கும். இலையின் ஓரம் முழுதும் ரம்பம் போல்  இருக்கும். 




குண்டலம், குண்டலமாக அதன் விதைகள் பலஅடுக்குகள் கொண்டதாக இருக்கும். இலை அடுக்குகளுக்கு இடையில் இந்த விதை அடுக்குகள் இருக்கும்.







குப்பைமேனி இலைகள் -  இரண்டு கைப்பிடி அளவு.

தேங்காய் எண்ணெய் - 250 மி.லி.

விளக்கெண்ணெய் - 3 டீஸ்பூன்.







குப்பைமேனி இலைகள் ஆயும் போது கைகள் லேசாக அரிப்பது போல் இருக்கும். பயப்பட வேண்டாம். சிறிது நேரத்திலே சரியாகி விடும்.

குப்பைமேனி இலைகளை கழுவி, ஆய்ந்து கொள்ளவும். தண்ணீர் உலர்ந்ததும் மிக்சியில் போட்டு மையாக அரைத்து கொள்ளவும். அறைக்கும் பொது தண்ணீர் விட வேண்டாம். இலைகளில் இயற்கையாக உள்ள நீர் சத்தே போதும்.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும் நன்கு கலக்கவும். பின், அரைத்த குப்பைமேனி விழுதையும் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை வாணலியில் கொட்டி கொதிக்க விடவும். அடுப்பை சிம்மில் வைத்து 20 நிமிட நேரம் கொதிக்க விடவும்.
குப்பைமேனி செடி                      PHOTO: Sundarramg
அடுப்பை அணைத்து கொதித்த எண்ணெய் கலவையை ஆற வைக்கவும்.

இப்போது குப்பைமேனி தைலம் தயார்.





 குப்பைமேனி தைலம் தயாராகிறது                                                                      PHOTOS: Srividya Raman



Thursday 24 October 2013

இன்ஸ்டன்ட் சாமை தோசை

சில வட இந்திய மாநிலங்களில், குறிப்பாக, மகாராஷ்டிராவில், நவராத்திரி விரதத்தின் போது, சாமை அரிசியில் செய்த உணவை விரும்பி உண்கிறார்கள். அவர்களுக்கு, சாமை விரத கால உணவு. நல்லவை எவ்வளவு தொலைவிலிருந்து வந்தாலும், விரும்பி ஏற்கலாமே?

சாமை தோசை 


சாமை மாவு 
தக்காளி
பச்சை மிளகாய் 
மிளகு, சீரக பொடி 
உப்பு  







ஒரு டம்ளர் சாமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்க்கவும். மிளகு, சீரகபொடி கலந்து நீர் விட்டு கரைக்கவும்.தோசை மாவு பதம் வருமளவில் தண்ணீர் சேர்க்கவும். தோசை கல்லை சூடாக்கி  வார்க்கவும். ஒரே சீராக ஊற்ற வேண்டும். கரண்டியால் தேய்க்கக் கூடாது.

சாமை மாவு +தக்காளி+பச்சை மிளகாய்+
மிளகு, சீரக பொடி+உப்பு

 

ஆர்கானிக் பொருட்கள் விற்கும் கடைகளில், சாமை மாவு கிடைக்கும்.மிளகு, சீரக பொடி தயார் செய்து வைத்துக் கொண்டால் நொடியில் ரெடி சாமை தோசை.

சாமை மாவை கரைத்த உடனே தோசை வார்க்கலாம்.காத்திருக்க தேவையில்லை.

சாமை தோசை சுவை மிக நன்றாக வந்திருந்தது.

வழக்கமாக தோசைக்கு தொட்டுக் கொள்ளும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி துவையல், தோசை மிளகாய் பொடி....இவற்றில் ஏதாவது ஒன்றை தொட்டு சாப்பிடலாம். மிளகு, சீரக பொடியும், தக்காளியும் சேர்ப்பதால் தொட்டுக் கொள்ள எதுவும் இல்லாமலே கூட சாமை தோசையை சாப்பிடலாம்.   

Sunday 20 October 2013

அன்னாபிஷேகம்

சென்னை (தியாகராய நகர்)  C.I.T. நகர் சக்தி கணபதி ஆலயத்தில் கமடேஸ்வரருக்கு அன்னாபிஷேகம்                                                                                                             PHOTO: Srividya Raman

ஐப்பசி மாத பவுர்ணமி அன்று, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். இந்த வருடம், 18/10/2013 அன்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. ஐப்பசியில் அஸ்வதி நட்சத்திரம் அன்றும் அன்னாபிஷேகம் செய்வார்கள். சிவலிங்கத்தின் மீது 'அன்னம்' (cooked rice) சார்த்தி வழிபடுவதே அன்னாபிஷேகம். எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதே அன்னாபிஷேகத்தின் அடிப்படை சாராம்சம். 

அன்னாபிஷேக ஐதீகம் 

நமக்கு எல்லாம் அளித்த இறைவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து நன்றிக் கடன் செலுத்துகிறோம். அன்னாபிஷேகம் செய்வதன் மூலம் நாட்டில் பசி, பட்டினி நீங்கி, சுபிக்ஷம் பெருகும் என்பது ஐதீகம். அன்னாபிஷேகம் செய்வதால் தங்கள் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அன்னாபிஷேக பிரசாதம் உண்டால் அடுத்த பிறவி கிடையாது என்றொரு ஐதீகம் உண்டு. இந்த பிறவியில் பசிப் பிணி இல்லாதிருக்கவும், இம்மைக்கு அப்பால் பிறவிப் பிணி நீங்கவும் பக்தர்கள் செய்வது தான் அன்னாபிஷேகம். சிவபெருமானுக்கு செய்யப் படும் அபிஷேகங்களில் எளிமையானது  அன்னாபிஷேகம் தான். அன்னாபிஷேகத்தை தொடர்ந்து   நடைபெறும் அன்னதானம், அன்னாபிஷேகத்தின் குறிப்பிடத் தகுந்த அம்சம்.

ஐப்பசி பவுர்ணமி அன்று மாலையில் அன்னாபிஷேகம் நடைபெறும். பக்தர்களின் தரிசனத்திற்கு பின் சிவலிங்கத்திற்கு சார்த்திய அன்னம் நீர்நிலைகளில் கரைக்கப் படும். இதன்மூலம் நீரில் உள்ள ஜீவராசிகள் ரக்க்ஷிக்கப் படுகின்றன. பிறகு, சிவனுக்கு படைக்கப் பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாகவும், அன்னதானமாகவும் வழங்கப் படுகிறது. பக்தர்கள் காணிக்கையாக் அளித்த அரிசி, வெல்லம், காய்கறிகள், பழங்கள் ஆகியவை அன்னாபிஷேக அலங்காரத்தில் பயன் படுத்தப் படுகின்றன. சிவலிங்கத்தை முழுமையாக மறைக்கும் வண்ணம் அன்னத்தால் அலங்காரம் செய்யப் படுகிறது. இந்த அலங்காரத்தின் மேல் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றால் சிவபெருமானின் முகம் காட்சி படுத்தப் படுகிறது. காண கண்ணிரண்டு போதவில்லை.

அன்னாபிஷேகம் நடைபெறும் சிவ ஆலயங்களில் குறிப்பிடத்தக்கவை தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் ப்ரஹதீஸ்வரர் ஆலயம், சிதம்பரம் நடராஜர் கோவில்.

நித்ய அன்னாபிஷேகம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் சந்திரமௌலீஸ்வருக்கு நித்ய (தினசரி) அன்னாபிஷேகம் செய்யப் படுகிறது.

தஞ்சை பெரிய கோவிலில் 500 கிலோ அரிசி, ஒரு டன் காய்கறிகள் கொண்டு அன்னாபிஷேகம் செய்யப் படுகிறது.

கங்கை கொண்ட சோழபுரம் ப்ரஹதீஸ்வரர் ஆலயத்தில், காஞ்சி மகாபெரியவாள் ஆக்ஞைபடி 1986லிருந்து வருடா வருடம் அன்னாபிஷேகம் நடந்து வருகிறது. " அன்னாபிஷேகம் செய்தால் நாட்டில் மழை பொழியும்"   என்பது மகா பெரியவாளின் அருள்வாக்கு.

காஷ்யப முனிவர் அருளிய 'பேரூர் புராணத்தில்' அன்னாபிஷேகம் செய்வதால் கிட்டும் அறிய பலன்கள் பற்றி குறிப்பிடப் பட்டிருக்கிறது.

முருக பெருமானுக்கு அன்னாபிஷேகம் 

ஐப்பசியில்  அன்னாபிஷேகம் அனைத்து சிவாலயங்களிலும் சிவலிங்கத்திற்கு செய்யப் பட்டாலும், பழனி முருகன் கோவிலில் ஆனி மாதத்தில் உச்சி காலத்தில், முருக பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப் படுகிறது. திருவாவினங்குடி முத்து குமாரசுவாமி ஆலயத்தில் அதே ஆனி மாதத்தில் அன்னாபிஷேகம் செய்யப் படுகிறது. சென்னை மேற்கு மாம்பலம் ஸ்கந்தாஸ்ரமத்தில் ஐப்பசியில் அன்னாபிஷேகம் முருகக் கடவுளுக்கு செய்யப் படுகிறது.

அன்னபூர்ணேஸ்வரர்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகில் உள்ளது அன்னவாசல். புதுக்கோட்டை அன்னவாசல் வேறு. சேங்காலிபுரம் செல்லும் வழியில் உள்ளது திருவாரூர் அன்னவாசல். இந்த அன்னவாசலில் அன்னபூர்ணேஸ்வரி சமேத அன்னபூர்ணேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அன்னவாசல் அன்னபூர்ணேஸ்வரர் கோயிலில் பல நூற்றாண்டுகளுக்கு முன் நித்ய (தினசரி) அன்னாபிஷேகம் நடை பெற்றிருக்கிறது. இதன்மூலம் மக்கள் பசி, பஞ்சம் இவற்றிலிருந்து காக்கப் பட்டனர். இந்த கோயில் இன்று நித்ய பூஜையே சிரமத்துடன் நடத்தும் நிலையில் உள்ளது.

ஆவுடையாருக்கு அன்ன நைவேத்யம்

சென்னை நந்தனம் அருகில்  C.I.T. நகரில் உள்ள சக்தி கணபதி ஆலயத்தில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தின் புகைப்படம்தான் மேலே நீங்கள் காண்பது. மாலையிலிருந்தே கூடியிருந்த பக்தர்களுக்கு சிவபெருமான் அன்னாபிஷேக கோலத்தில் அருள் பாலித்தார். ஆவுடையாரை சுற்றியிருந்த இடம் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு  இருந்தது கண் கொள்ளா காட்சி. இதன் பிறகு அன்ன தானம். பொதுவாக பிரசாதம் என்றால் எவ்வளவு அளவு என்பது நமக்கு தெரியும். ஆனால்  இந்த கோயிலில் போதும்.....போதும் என்கிற அளவு அனைவருக்கும் கொடுத்து, அனைவரையும் சிவ பெருமானின் அருளுக்கு பாத்திரமாக செய்தனர்.   அடுத்த நாளே இந்த பகுதி முழுதும் மழை பெய்தது  தெய்வ சங்கல்பம்.

அன்னாபிஷேகத்தின் முக்கியத்துவம் 

மனித வாழ்வில் உணவின் முக்கியத்துவத்தை நமது முன்னோர் நன்கு உணர்ந்துள்ளனர். அதன் வெளிப்பாடே அன்னாபிஷேகம் போன்ற தெய்வீக நிகழ்வுகள்.  யாரும் பசித்திருக்கக் கூடாது என்ற நல்ல எண்ணம், அன்னாபிஷேகத்தை தொடரும் அன்னதானமாக வெளிப் படுகிறது. "   உண்ணும் உணவில் மட்டும்தான் இது போதும் என்று மனித மனம் திருப்தியுறும். பொன், பொருள் என்று எத்துணை அளித்தாலும் இன்னும் கொஞ்சம் இருந்தால் நன்றாயிருக்கும் என்றே மனித மனம் எண்ணும் " . எனவேதான் அன்னாபிஷேகம், அன்னதானம் என்று வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். கோயில் என்பது மனித குல மேம்பாட்டிற்கான மைய புள்ளியாக அமைந்திருக்கிறது என்பதையே இத்தகைய வழிபாட்டு முறைகள் உணர்த்துகின்றன.

அன்னாபிஷேகமும் ஆர்கானிக் உணவும் 

அடுத்த வருட அன்னாபிஷேகத்தின் போது, ஆர்கானிக் உணவு ஆர்வலர்கள் , ஆர்கானிக் அரிசி, ஆர்கானிக் காய்கறிகள், ஆர்கானிக் பழங்களை கோயில்களுக்கு அளித்தால் நன்றாயிருக்கும் என்று எண்ணுகிறேன். ஏனென்றால் பண்டை காலத்தில் அன்னாபிஷேகம் ஆரம்பித்தபோது அனைத்து உணவு பொருள்களும் ஆர்கானிக் முறையில்தான் விளைவிக்கப் பட்டிருக்கும். மனித குல நன்மைக்கான ஆன்மீக நிகழ்வில் உரமில்லா உணவும், பூச்சிக் கொல்லியில்லா உணவும் பயன் படுத்த ஆர்கானிக் வணிக நிறுவனங்கள் உதவலாம்.

Thursday 17 October 2013

கடலை பருப்பு சுண்டல்



தேவையான பொருள்கள் 


கடலை பருப்பு - 100 கிராம்.
பச்சை மிளகாய் - 1.
வர மிளகாய் - 2.
கருவேப்பிலை 
கடுகு
உளுத்தம் பருப்பு 
பெருங்காயம் 
உப்பு 
சீரகம் - விருப்பப்பட்டால்
தேங்காய் - விருப்பப்பட்டால்



கடலை பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.  பின்னர் நசுக்கினால் மாவாகும் பதம் வரும் வரை வேக விடவும்.   உப்பு சேர்த்து  ஒரு கொதி விட்டு, நீரை வடித்து வைக்கவும்.  வாணலியை  அடுப்பில் வைத்து  சூடானதும் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, வர மிளகாய் தாளித்து,  கருவேப்பிலை, பச்சை  மிளகாயுடன் கடலை பருபையும்  சேர்த்து கிளறவும். இறக்கி வைத்து தேங்காய் துருவலை கலக்கவும்.   புரதச் சத்து நிறைந்த கடலை பருப்பு சுண்டல் தயார்.

" அதிகம் உண்பதும் தவறு.....அதிக நேர இடைவெளி விட்டு உண்பதும் தவறு "    என்கிறார்கள் மருத்துவர்கள். அந்த வகையில் பார்த்தால், மதிய உணவுக்கும், இரவு உணவுக்கும் இடையில், மாலை நேர சிறு உணவாக உட்கொள்ள, சுண்டல் வகைகள் சிறந்தவை. 

Wednesday 16 October 2013

பாசி பருப்பு சுண்டல்

பாசி பருப்பு சுண்டல் 

 தேவையான பொருள்கள் 


பாசி பருப்பு - 100 கிராம் 
பச்சை மிளகாய் - 1
வர மிளகாய் - 1
கருவேப்பிலை - சிறிது.
கடுகு
உளுத்தம் பருப்பு 
பெருங்காயம் 
உப்பு 
சீரகம் - விருப்பப்பட்டால்
தேங்காய் - விருப்பப்பட்டால்




250 மி.லி. அளவு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வைத்து கொதிக்க விடவும். பிறகு, தேவையான அளவு உப்பை போட்டு, பாசி பருப்பையும் போடவும். உப்பு போட்டு வேக வைத்தால் தான், பாசி பருப்பு குழையாமல், உதிர், உதிராக இருக்கும். 

ஒரு கொதி வந்ததும், அடுப்பை அணைத்து, ஒரு தட்டை போட்டு மூடி வைக்கவும். 20 நிமிடம் கழித்து, தண்ணீரை வடிக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், வரமிளகாய்  போட்டு தாளிக்கவும். பச்சை  மிளகாய் கருவேப்பிலை இரண்டையும் போட்டு, ஒரு பெரட்டு பெரட்டி, நீர் வடித்த பாசி பருப்பையும்போட்டு கிளறவும்.


அடுப்பை அணைத்து,   பின் துருவிய தேங்காயை தூவவும். நவராத்திரி மட்டுமன்றி எல்லா நாட்களிலும் எளிதாக செய்யக் கூடிய , பாசி பருப்பு சுண்டல் ரெடி.




பாசி பருப்பு சுண்டல் 

Tuesday 15 October 2013

சிறு (சிவப்பு) காராமணி சுண்டல்-வட இந்திய பாணி

சிவப்பு சிறு காராமணி சுண்டல்-வட இந்திய பாணி 
சிறு (சிவப்பு)காராமணி 
காராமணியில் மூன்று வகை உண்டு. பெரிய சிவப்பு காராமணி, சிறு காராமணி (சிவப்பு) மற்றும் வெள்ளை காராமணி. சிறு காராமணி எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை.  Morarka Organic ல் சிறு காராமணி கிடைக்கிறது. 

நவராத்திரி சீசன் என்பதற்கு பதிலாக சுண்டல் சீசன் என்று சொல்லி விடலாம். குறைந்தது ஒரு டஜன் சுண்டல் வகைகள் செய்கிறார்கள். அடிப்படையில் இனிப்பு சுண்டல், கார சுண்டல், மசாலா சுண்டல், பீச் சுண்டல் (தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல்), ஒன்றுக்கு மேற்பட்ட பருப்பு வகைகளை கலந்து செய்யும் கதம்ப சுண்டல் என்று சுண்டலை வகைப் படுத்தலாம். 

வழக்கமான சுவையிலிருந்து சற்றே மாறுபட்ட சுண்டலை செய்யலாமே என்று தோன்றியது. அதுதான் வட இந்திய பாணி சுண்டல். Morarka Organic products பெரும்பாலானவை ராஜஸ்தானில் பயிரிடப் படுபவை. அதை வட இந்திய பாணியிலேயே செய்து பார்க்க நினைத்தேன்.

மாறுதலான, நல்ல சுவை கிடைத்தது. இதோ....வட இந்திய பாணி சிறு காராமணி சுண்டல்.

சிறு (சிவப்பு) காராமணி-100 கிராம்

சாட் மசாலா  - 1 டீஸ்பூன் 
எலுமிச்சை சாறு (விருப்பப் பட்டால்)
வர மிளகாய் -2
கடுகு 
உளுத்தம் பருப்பு 
மஞ்சள் தூள் 


காராமணி மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி மூடி வைக்கவும். 4 மணி நேரம் ஊறிய பிறகு, அடுப்பில் வைத்து வேக விடவும். முக்கால் பதம் வெந்த பிறகு, உப்பு போட்டு தொடர்ந்து வேக வைக்கவும். 

காராமணியை தண்ணீர் வடித்து, எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, கடுகு சேர்த்து  தாளித்து சிறிது மஞ்சள் தூள் சேர்க்கவும். பின்னர் கருவேப்பிலை மற்றும்   காராமணியை  சேர்த்து கிளறவும். ஒரு பாத்திரத்துக்கு சுண்டலை மாற்றி சூடு ஆறுவதற்குள் chat  மசாலாவை கலந்து பரிமாறவும். விருப்பப்படுவர்கள்  சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளலாம்.


கொலு கொண்டாட்டம் - சென்னை முப்பாத்தம்மன் கோவில் கொலு
                                                                                  PHOTO: Srividya Raman

Monday 14 October 2013

சிறு (வெள்ளை) மூக்கு கடலை சுண்டல்

மூக்கு கடலை சுண்டல் 


சிறு (வெள்ளை) மூக்கு கடலை - 150 கிராம்
(White Channa-Small)

தேங்காய்

கடலை பருப்பு
உளுத்தம் பருப்பு
பெருங்காயம்
வர மிளகாய் - 3
கருவேப்பிலை
பச்சை மிளகாய் - 2

உப்பு



எல்லா கடலைகளையும் போல இதற்கும்  மூழ்கும் அளவு நீர் விட்டு, ஒரு கொதி விட்டு அடுப்பை அணைத்து், மூடி வைக்கவும்.

முக்கால் பதம் வெந்தபிறகு தேவையான உப்பு சேர்த்து, நசுக்கினால் மாவாகும்  வரை வேகவைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் இவற்றை சிவக்க வறுத்து, ஆறியவுடன் தேங்காய் துருவல், ஒரு பச்சை மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து  வைத்து கொள்ளவும்.

 பின் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வர மிளகாய், கருவேப்பிலை சேர்த்து சிவக்க வறுத்து, ஒட்ட நீர் வடித்த கடலையை சேர்க்கவும். 

சிறிது பிரட்டி, அரைத்து வைத்த பொடியை தூவி,  நன்கு கலந்து இறக்கவும்.

சிறு (வெள்ளை) மூக்கு கடலை எல்லா கடைகளிலும் கிடைப்பதில்லை. பெரிய வெள்ளை கடலை (காபுலி சன்னா) தான் எல்லா கடைகளிலும்கிடைக்கிறது. சிறு வெள்ளை கடலை Organic கடைகளில் கிடைக்கிறது. 


கொலு கொண்டாட்டம் - சென்னை முப்பாத்தம்மன் கோயில் கொலுவில் கல்யாணமும் சாப்பாட்டு பந்தியும்                        PHOTO: Srividya Raman

Sunday 13 October 2013

சாமை புலாவ்

தலைவாழை விருந்து 50 வது போஸ்ட் 




                                                                 சாமை புலாவ் 

சாமை அரிசி 
உருளை கிழங்கு 

நிலக் கடலை 






சாமை - 150 கிராம் 
உருளை கிழங்கு - 3 (நடுத்தர அளவில்)
நிலக் கடலை - 50 கிராம் 
பட்டை - சிறிதளவு 
சீரகம் - ஒரு தேக்கரண்டி 
மிளகு - ஒரு தேக்கரண்டி 
கிராம்பு - 4
ஏலக்காய்  - 2
இஞ்சி - சிறு துண்டு 
பச்சை மிளகாய் - 1
முந்திரி - சிறிது 
பாதாம் பருப்பு - சிறிது 
கருவேப்பிலை
கொத்தமல்லி இலை 
நெய் 
உப்பு 
எலுமிச்சை சாறு

சாமை அரிசி பார்க்க முத்து போல் இருக்கும். 


செய்முறை 


சாமை அரிசியை சுத்தம் செய்து, தண்ணீரில் ஊற வைக்கவும். 

உருளை கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, உடைத்து கொள்ளவும். 

நிலக் கடலையை வறுத்து, பொடித்துக் கொள்ளவும். 

இஞ்சி, பச்சை மிளகாய் இரண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். 

வாணலியில் , பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சீரகம் - இவற்றை போட்டு, வாசனை வரும் வரை லேசாக சூடு காட்டவும். பின் இவற்றை மிக்சியில் போட்டு நன்றாக பொடிக்கவும். 

வாணலியில் நெய் ஊற்றி, பொடித்த பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சீரகம் கலவையை போட்டு, சற்று நேரம் கிளறவும். 

பிறகு இஞ்சி, பச்சை மிளகாய் விழுதையும் சேர்த்து, சற்று நேரம் கிளறவும். 

 உடைத்த உருளை கிழங்கு, கருவேப்பிலை, கொத்தமல்லி இலை - இவற்றையும் போட்டு 5 நிமிட நேரம் நன்கு கிளறவும். 

பின் நிலக்கடலை பொடி, நீர் வடித்த சாமை அரிசி இவற்றை போட்டு சிறிது நேரம் கிளறவும். 

அரை லிட்டர் தண்ணீர், உப்பு  சேர்த்து குக்கருக்கு மாற்றவும். 

5 விசில் விடவும். 

15  நிமிடம் கழித்து குக்கரிலிருந்து இறக்கவும்.

முந்திரி, பாதாம் இவற்றை நெய்யில் வறுத்து, சாமை புலாவ் மீது தூவவும். சிறிது கொத்தமல்லி இலைகளையும் தூவலாம்.  எலுமிச்சை சாறு பிழிந்து விடவும். 

இப்போது சாமை புலாவ் ரெடி.

இதற்கு வெள்ளரி தயிர் பச்சடி தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

குறிப்பு: 

வெங்காயம், பூண்டு இல்லாமலே, சாமை புலாவ் சுவை நன்றாக இருந்தது. புலாவ் பிரியர்கள் சிலரிடம் டேஸ்ட் பார்க்க சொன்னோம்.  '' வழக்கமான புலாவை விட நன்றாக இருக்கிறது '' என்றார்கள். உங்கள் கருத்து என்ன? செய்து பார்த்து, சுவைத்து பார்த்து சொல்லுங்கள்.

Friday 11 October 2013

பாசி பயறு சுண்டல்

பாசி பயறு சுண்டல் 

தேவையான பொருள்கள் 


பாசி பயறு - 100 கிராம்.
பச்சை மிளகாய் - 1.
வர மிளகாய் - 2.
கருவேப்பிலை - சிறிது.
தேங்காய் 
கடுகு
உளுத்தம் பருப்பு 
பெருங்காயம் 
உப்பு 
சீரகம் - விருப்பப்பட்டால்




பாசி பயறை வாணலியில் வறுத்து, பின் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். முக்கால்  பதம் வெந்ததும் உப்பு போட்டு, தொடர்ந்து வேக வைக்கவும். நன்கு வெந்ததும், தண்ணீரை வடித்து அடுப்பிலிருந்து இறக்கவும்.



ஒரு வாணலியில் வர மிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் போட்டு தாளிக்கவும். பின் பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு, நீர் வடித்த பயறையும் போட்டு நன்கு கிளறவும். பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி, துருவிய தேங்காய் தூவவும். இப்போது பாசி பயறு சுண்டல் சுடச் சுட தயார்.



பாசி பயறு , உடைக்காமல், முழு பயறாக (Green Moong Dal-Whole) பயன் படுத்தப் படுவதால், இதில் நார் சத்து அதிகம். நவராத்திரி தினங்களில் மட்டும் அல்லாமல், மற்ற நாட்களிலும் இந்த சுண்டலை சாப்பிடுவது நல்லது. பொதுவாக, உடல் எடை குறைக்க விரும்புவோரும், சர்க்கரை நோய் (Diabetes) உள்ளோரும் மாலை வேளையில் பாசி பயறு சுண்டல் சாப்பிடலாம்.
கொலு கொண்டாட்டம்-மரப்பாச்சி 

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...