Wednesday 14 December 2022

கூடிழந்த பறவகள்

10/12/2022 அன்று அதிகாலை மாண்டஸ் புயல் கரையை கடந்து கொண்டிருந்த பொழுது திடீரென ஏதோ விழுவது போல் சப்தம். எழுந்து போய் பால்கனி கதவை திறந்து பார்த்தால் எதிரே உள்ள கட்டிடத்தின் விளக்குகள் பளீரென தெரிந்தது. பின்னர்தான் உறைத்தது இத்தனை நாட்களாக விளக்கின் வெளிச்சத்தை மறைத்து கொண்டிருந்த வேப்பமரத்தை காணவில்லை என்பதே. எட்டிபார்த்தேன். சாலையை அடைத்து கொண்டு கிடந்தது அந்த வேப்ப மரம். எத்தனை பறவைகள் அதிலும் குறிப்பாக காகங்கள் கூடு கட்டி குடுத்தனம் நடத்தி கொண்டு இருந்தன தெரியுமா? ஒரு காகம் முட்டையிட்டு குஞ்சு பொரித்து தனது குழந்தைக்கு கரைய கற்று கொடுத்தது வரை பல நாட்கள் கண்டு ரசித்து இருக்கிறேன். என்னை பார்த்து பயந்ததேயில்லை அந்த பறவைகள். அதிலும் ஒரு காகம் நான் சாதம் வைக்க தாமதம் ஆனால் சமையலறை ஜன்னலில் வந்து அமர்ந்து கத்தும். வந்துட்டியா மாமியாரே! என்று சொல்லி விட்டுதான் சாதத்தை பால்கனிக்கு எடுத்து செல்வேன். அடுத்த நொடி பறந்து வந்து பால்கனியில் அமர்ந்து கொள்ளும். கோடை காலங்களில் தண்ணீர் வேண்டும் என்றால் தண்ணீர் வைக்கும் டப்பாவை கொத்தி கொத்தி காட்டும். இன்று மரம் மிகப்பெரிய அளவு சரிந்து விட்டது. எங்கே சென்றிருக்கும் கூடு இழந்த பறவைகள். நாடிழந்த அகதிகள் போல் ஆகி விட்டன கூடிழந்த பறவைகளின் நிலை. அடுத்தநாள் பொழுது விடிந்ததும், ஆட்கள் வந்து மரத்தை வெட்டிய பொழுது அடுத்து இருக்கும் கட்டிடங்களில் அமர்ந்து பார்த்து கொண்டே இருந்தன அந்த பறவைகள். ஏற்கனவே நகரங்களில் தனி வீடுகள் அடுக்குமாடியாக மாறும்போது பசும் மரங்களை பலி கொடுத்து தான் கான்கிரீட் காடுகளை உருவாக்குகிறாகள். இந்த நிலையில் இயற்கையும் சதி செய்தால் எங்கு செல்லும் இந்த பறவைகள்? பல பறவைகளுக்கு அடைக்கலம் கொடுத்த ஒரு மரத்தின் பயணம்

Sunday 12 May 2019

மோர் மிளகாய் செய்முறை-ஒரு காணொளி

மோர் மிளகாய்


கோடை வெயிலை வீண் செய்யாமல், அருமையான தஞ்சாவூர் குடை மிளகாய் வாங்கி, மோர் மிளகாய் செய்வது எப்படி? 

இதோ, மோர் மிளகாய் வீடியோ ரெசிப்பி.







Sunday 5 May 2019

தஞ்சாவூர் குடை மிளகாய்.....மொறு...மொறு.....மோர் மிளகாய்


மோர் மிளகாய் 


தனித்துவமான ..........

தஞ்சாவூர் குடை மிளகாய் 


இப்போது எல்லா  'சீசனிலும்'  எல்லா உணவுகளும் கிடைக்கின்றன. Cold Storage புண்ணியத்தால்  வருடம் முழுவதும் ஆப்பிள் கிடைக்கிறது. அதில் "சுவையும் இல்லை... ஆரோக்கியமானதும் இல்லை " என்பது வேறு  விஷயம். 

ஆனால் இன்றும்  கோடையில்  மட்டுமே கிடைக்கக் கூடியவை  மாங்காய், மாம்பழம், மாவடு மற்றும் தஞ்சாவூர் குடை மிளகாய்.

ஆவக்காய் ஊறுகாய், மாவடு & மோர் மிளகாய்  - இந்த மூன்றையும் கோடையின் அற்புதம் எனலாம். 

இந்த அற்புதங்களில் ஒன்றான மோர் மிளகாய்  பற்றி தான் இந்த பதிவு.

Capsicum a.k.a. Simla Mirchi, Green Chilli - இந்த இரண்டும் ஆண்டு முழுவதும் கிடைக்கும். ஆனால்  மோர் மிளகாய் போட இவை உதவாது.

ஹோட்டல்களில்  பரிமாறப் படும்  மோர் மிளகாய் , இந்த நீளமான பச்சை  மிளகாய் கொண்டுதான் செய்யப் படுகிறது. சட்னி  செய்ய பயன் படும் பச்சை  மிளகாயில்  மோர் மிளகாய் போடுவது  அபத்தமான செயல். அதில் வாசனையோ, கெட்டி தன்மையோ இருக்காது. வாணலியில் போட்ட உடன் கருகி விடும்.

தஞ்சாவூர் குடை மிளகாய் 



   ஆனால்  தஞ்சாவூர் குடை மிளகாயின்  சுவையும், மணமும் வார்த்தைகளால் சொல்ல இயலாதவை. சாப்பிட்டு பார்த்து மட்டுமே உணர  முடியும்.

இன்று  தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும் கிடைத்தாலும், தஞ்சாவூர்தான் குடை மிளகாயின் தாய் வீடு.


எப்போது கிடைக்கும்?

பிப்ரவரியில்  துவங்கி  ஏப்ரல்  முதல் வாரம் வரை  மட்டுமே  தஞ்சாவூர் குடை மிளகாய் கிடைக்கும். சென்னையில்  மாம்பலம் மார்க்கட், மைலாப்பூர்  மார்க்கட், நங்கநல்லூர், திருச்சியில்  நந்தி கோயில்  தெரு ஆகிய இடங்களில்  கிடைக்கும். ஆனால் தஞ்சாவூரில்  ஃபிரெஷ் ஆகவும், விலை  குறைவாகவும் கிடைக்கும்.


இயற்கையோடு ......... 

இணைந்து வாழ்வோம் .........

   அந்த அந்த சீசனில் கிடைக்கும் உணவு பொருள்கள்  தரமானதாகவும், விலை குறைவாகவும் இருக்கும். முடிந்த வரையில்  நாம் வசிக்கும் பகுதிக்கு அருகில் விளையும்  உணவு பொருள்களை  பயன் படுத்துவது  நல்லது. கோடை வெய்யிலை  பயன்  படுத்தி  அரிசி வடாம், ஜவ்வரிசி வடாம், சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல், வெண்டைக்காய் வற்றல், கொத்தவரங்காய் வற்றல், மோர் மிளகாய்  -.- ஆகியவை செய்யலாம்.


அது என்ன குடை மிளகாய்? 


பார்த்தால் குடை போன்றே தோற்றம் இருக்கும். அதனால் இப்படி பெயர்  வைத்திருக்கலாம்.


மோர்  மிளகாய்  செய்முறை 

மோர் மிளகாய் 

STEP 1: 


தஞ்சாவூர்  குடை மிளகாய்களை  ஒரு  வாயகன்ற  பாத்திரத்தில்  போட்டு, தண்ணீர் விட்டு  நன்கு சுத்தம் செய்யவும். 

அழுகிய  மிளகாய் இருந்தால்  தூக்கிப் போட்டு விடவும். 

குட்டி மிளகாய்களை  தூக்கிப் போட வேண்டாம். சிறிய மிளகாய்...பெரிய மிளகாய்  - இரண்டுமே ருசியாகவே  இருக்கும்.

கழுவிய  பின், ஒரு வடி தட்டில் போட்டு, நீரை  வெளியேற்றவும்.

STEP 2 :



   பிறகு, ஒரு சிறிய  ஊசி வைத்து, ஒவ்வொரு மிளகாயிலும், இரண்டு அல்லது மூன்று சிறிய ஓட்டைகளை போடவும். தயிரில்  ஊற வைக்கும் போது, இந்த ஓட்டை வழியாக , தயிர் ஊடுருவி  செல்லும். சுவை கூடும்.

STEP 3 :




   நன்கு  புளித்த தயிரை, சிலுப்பி  வைத்துக் கொள்ளவும். சிலுப்பிய தயிரில் உப்பு சேர்க்கவும். உப்பு  சற்று அதிகமாக போட வேண்டும். அப்போதுதான் மோர் மிளகாயின் காரம் அடங்கும். ஒரு கிலோ குடை மிளகாய்க்கு  ஒரு கைப்பிடி உப்பு போடலாம்.

தயிர்  அதிகமாக தேவைப் படும். எனவே  மோர் மிளகாய்  போடுவதற்கு ஒரு வாரம் முன்பே தயிர் சேகரிக்க துவங்கி விட வேண்டும். தினமும் வீட்டில் மீதமாகும் புளித்த தயிரை  Fridgeல்  வைக்கவும். இப்படி மூன்று நாட்களுக்கு  செய்தால்  ஓரளவு  தயிர் சேர்ந்து விடும்.







STEP 4 :


   சுத்தம் செய்து, துளையிட்ட மிளகாய்களை, ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு, தேவையான அளவு  தயிர் சேர்க்கவும். தயிர் கெட்டியாக இருப்பதால், எவ்வளவு  சேர்த்தாலும்  மிளகாய் தயிரை உறிஞ்சி விடும். இந்த தயிர்தான் மிளகாய்க்கு சுவை தரும். தயிர்  மிளகாய் மேல் பிசிறிக் கொண்டு நிற்கும். இப்போது உப்பு  போட்ட மோர்  கொஞ்சம் சேர்த்தால்  மிளகாய் மோரில் மூழ்கும். மிளகாய்  உள்ளேயும்  மோர்  ஈசியாக செல்லும்.

STEP 5 :


மறுநாள்  காலையில், தயிரில் ஊறிய மிளகாய்களை  தயிரை பிழிந்து விட்டு,  தட்டுகளில் பரப்பி, மொட்டை மாடியில் காய வைக்கவும். மிளகாய் ஊற வைத்த தயிரை பத்திரமாக மூடி வைக்கவும்.

பகல் முழுக்க வெய்யிலில்  காய்ந்த மிளகாய்களை, திரும்பவும் அதே தயிரில்  இரவு முழுக்க போட்டு  வைக்கவும். 

   இப்படி, மூன்று நாட்களுக்கு, பகலில் காய வைப்பது, இரவில் தயிரில் ஊற வைப்பது என்று செய்ய வேண்டும்.



மூன்று நாட்களுக்கு பிறகு, மிளகாயின் பச்சை நிறம் மாறி, பழுப்பு நிறம் வரும். இனி, தயிரில்  ஊற வைக்க வேண்டியது இல்லை.








   ஆனால் நேர்  வெய்யிலில், மிளகாய்,  ஒரு வாரமாவது காய வேண்டும். நீளமான  காட்டன் துணியில்  போட்டால்  சீக்கிரம் காய்ந்து விடும்.

மொறு....மொறு....மோர் மிளகாய் 

   மிளகாயில் விரல் தொட்டு, மெதுவாக அழுத்தினால், மிளகாய் உடைய வேண்டும். இதுதான் சரியான பதம். இந்த பதம் வந்த பின் காய வைக்க வேண்டியது இல்லை.

   காற்றுப் புகாத பாத்திரத்தில் போட்டு வைத்து பயன் படுத்தவும்.

   மாதம் ஒருமுறை மட்டும், லேசாக வெய்யிலில் வைத்து எடுத்தால், வருடம் முழுவதும் கெடாமல் இருக்கும்.

வறுத்த மோர் மிளகாய் 

மோர் மிளகாய் 

   வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெய் விட்டு, எண்ணெய் சூடானதும், மோர் மிளகாய்களை போட்டு, வறுத்து எடுக்கவும். மிளகாய் ரொம்பவும் கருகி விடக் கூடாது. மிளகாய் உள்ளே உள்ள விதைகளும் வறுபடும் வரை வறுக்க வேண்டும்.

   தஞ்சாவூர் குடை மிளகாயில் செய்த இந்த மோர் மிளகாய், தயிர் சாதத்திற்கு தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.


தயிர் சாதம்+மோர் மிளகாய்=சூப்பர் காம்பினேஷன் 

Thursday 11 April 2019

சென்னை மெரினா கலங்கரை விளக்கம்

சென்னை மெரினா கலங்கரை விளக்கத்தில் இருந்து 

Guest Post by Srividya Rajagopalan 


சென்னைக்கு சுற்றுலா வருபவர்கள் பார்க்க வேண்டிய இடங்கள் என்ன?

செயற்கை சுற்றுலா இடங்களான கிஷ்கிந்தா, MGM போன்ற theme parksஐ தவிர்த்து பார்த்தால், மிஞ்சும் இடங்கள் அதிகம் இல்லை. 

ஆனால், அதிக செலவு இல்லாமல், எல்லா வயதினரையும் ஈர்க்கும் இடங்கள் என்றால், பீச்  தான். மெரினா  கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, மகாபலிபுரம் என்று  இந்த பட்டியல் கொஞ்சம் நீளமாக இருக்கும்.

மெரினா கடற்கரையின் சிறப்பு அதன் கலங்கரை விளக்கம் (Light House).

கட்டணம் பத்து ரூபாய்தான். பத்தாவது மாடிக்கு liftல் அழைத்துச் செல்கிறார்கள். அரை வட்ட வடிவில் பால்கனி போன்ற இடம். அங்கு நின்றாலே  அருமையான காற்று நம்மை வருடுகிறது.

அங்கிருந்து பருந்து பார்வை பார்த்தால், நம் விழிகள் விரிக்கின்றன. முழு மெரினா கடற்கரை அழகும் நம் முன். காமராஜர் சாலை, அருகில் உள்ள கட்டடங்கள் என்று அசத்தும் காட்சிகள்.

புகைப் பட விரும்பிகளின் சொர்க்க புரி எனலாம்.

கலங்கரை  விளக்கத்தின் உச்சியில் இருந்து நான் எடுத்த புகைப் படங்களை, சிறு  வீடியோ  வடிவில்  காட்சி படுத்தியுள்ளேன். 

கண்டு ரசியுங்கள்.

மெரினா கலங்கரை விளக்கத்தில்  இருந்து

Saturday 16 February 2019

'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் தலைவாழை விருந்து

'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் தலைவாழை விருந்து 


 பொதுவாக உணவு பற்றியும், குறிப்பாக நமது பாரம்பரிய இனிப்பு வகைகளை இன்றைய தலைமுறையினர் விரும்பும் வகையில் மாற்றம் செய்வது குறித்தும், எனது சிறு பேட்டி, 07-02-2019 'The New Indian Express' நாளிதழின் சென்னை பதிப்பில் "Twisting Treats' என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது.

 'உணவு விரும்பி' (food lover) என்ற அடிப்படையிலும், 'தலைவாழை விருந்து' வலைத்தள பதிவர் என்ற முறையிலும் என்னிடம் பேட்டி எடுத்துள்ளனர்.

 கட்டுரையாளர் வைஷாலி விஜய்குமார் அவர்களுக்கும், 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கும், இந்த  பேட்டிக்கு என்னை பரிந்துரைத்த முகநூல் நண்பர் திரு ஸ்ரீதர் வெங்கட்ராமன் அவர்களுக்கும் மற்றும் 'தலைவாழை விருந்து' வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

 கட்டுரையை படித்து, தங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் 'தலைவாழை விருந்து' 

Sunday 20 January 2019

அமிர்தசரஸ் A1 குல்ஃபா

அமிர்தசரஸ் A1 குல்ஃபா  (Amritsar A1 Kulfa)


குல்ஃபா

டெல்லியில் ரப்ரி ஃபலூடா, குல்ஃபி ஃபலூடா என்று விதம் விதமான ஃபலூடா கிடைக்கும். ஏறக்குறைய இதே போன்றதொரு குளிர் இனிப்புதான் குல்ஃபா. 

இது பஞ்சாப் சிறப்பு குளிர் இனிப்பு வகை.

ஜிகர்தண்டாவின் சாயலும் குல்ஃபாவில் உண்டு.

எந்த ஊருக்கு சுற்றுலா சென்றாலும் அதை உணவு சுற்றுலாவாக (Culinary tour, food tour) மாற்றி விடும் வழக்கம் எனக்கு உண்டு. அந்த வகையில், அமிர்தசரஸ் செல்லுமுன் அந்த ஊரின் சிறப்பு உணவுகளை பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினேன். அமிர்தசரஸ் குல்சா (Amritsar Kulcha), லஸ்ஸி & குல்ஃபா இவை மூன்றுமே என்னை கவர்ந்தன. இந்த மூன்றில் என் கவனத்தை அதிகம் கவர்ந்தது குல்ஃபா. 

Famous Kulfa Shop & A1 Kulfa Shop. இரண்டுமே அமிர்தசரசின் அருமையான குல்ஃபா கடைகள். 

இதோ A1 குல்ஃபா.

அமிர்தசரஸ் A1 குல்ஃபா கடை (Amritsar A1 Kulfa Shop)


குல்ஃபி, ஐஸ் கிரீம், ஃபலூடா, பாதாம் பிசின் , இரண்டு வகை எசன்ஸ் சிரப் & ரப்ரி. இவற்றை  ஒரு தட்டில் ஒன்றின் மேல் ஒன்று போட்டால்  அமிர்தசரஸ் A1 குல்ஃபா ரெடி. குளிர்ச்சி, இனிப்பு, ஐஸ்க்ரீம் சுவை, பாலேடு சேர்த்த ரப்ரியின் சுவை எல்லாம் சேர்ந்து ஒரு கலவையான சுவையை உணர முடிகிறது.  ஃபேமஸ் குல்ஃபா கடையில் ரப்ரி  கெட்டியாக இருந்தது. A1 குல்ஃபாவில்  ரப்ரி  கொஞ்சம் தளர்வாய் இருந்தது. மற்றபடி குல்ஃபா பார்முலா  ஒன்றுதான். ஆனாலும் சுவையில் வேறுபாடு தெரிந்தது. இரண்டுமே நன்றாக இருந்தன. 

இரண்டுமே சின்னஞ்சிறிய  கடைகள். 

ஆனால்  குல்ஃபா ரசிகர் பட்டாளமோ மிகப் பெரியது.

அமிர்தசரஸ் A1 குல்ஃபா கடை (Amritsar A1 Kulfa Shop)
அமிர்தசரஸ் A1 குல்ஃபா  (Amritsar A1 Kulfa)

Monday 24 December 2018

அமிர்தசரஸ் சோளே பூரி

அமிர்தசரஸ் Kanha Sweets சோளே பூரி 


சோளே பூரி, சன்னா பட்டூரா, சோளே பட்டூரா, சன்னா பூரி - பெயர்கள் பல இருந்தாலும் சுவை ஒன்றுதான். ஆஹா...அற்புதம். வேறு வார்த்தை இல்லை. 'நன்றாக இருக்கிறது' என்று சொல்லக் கூட வாய் திறக்க முடியவில்லை. வாயை திறந்தாலே அதில் பூரியை திணிக்க சொல்கிறது மனம்.

கொண்டை கடலை மசாலாவுடன் பூரி. சன்னா பட்டூரா. பஞ்சாப் பகுதியின் சிறப்பு உணவு.

சிங்கத்தை அதன் குகைக்குள் சென்று சந்திப்பவர்கள் அல்லவா நாம்?

சோளே பூரியை அமிர்தசரஸ் சென்று சாப்பிட்டு வந்தேன்.
அமிர்தசரஸ் Kanha Sweets

அமிர்தசரஸ் லாரன்ஸ் ரோட்டில் உள்ள கண்ணா ஸ்வீட்ஸ் (Kanha Sweets). இது ஸ்வீட் ஸ்டால் மட்டும் அல்ல. இனிப்பகத்துக்கு பின்னால், சிறிய உணவகம் இருக்கிறது.
அமிர்தசரஸ் Kanha Sweets ஹோட்டல்

அமிர்தசரஸ் Kanha Sweets Hotel
சோளே பூரி 
இங்கே கிடைப்பது ஒரே ஒரு டிஃபன் தான். அதுவும் காலையில் மட்டுமே. அமிர்தசரஸ் நகரின் தலை சிறந்த சோளே பூரிதான் அந்த ஒற்றை டிஃபன்.

காலை ஒன்பது மணிக்கே, காய்ந்த வயிற்றுடன் சென்று விட்டோம். பூரியை ஒரு பிடி பிடிப்பது என்று திட்டம்.

ஹோட்டல் செல்லும் வழியில், திறந்த வெளியில் பூரி சுட்டுக் கொண்டிருந்தார்கள். திறந்த வெளி என்பதால் சுகாதார குறைவு என்று சொல்லி விட முடியாது. அவர்கள் பூரி தயாரிப்பதே கவிதை எழுதுவது போல் ரசனையாக உள்ளது. பூரி மாவை உருட்டி, உள்ளங்கையில் வைத்து பூரி தட்டி விடுகிறார்கள். பலகை, பூரி கட்டை எல்லாம் தேவையில்லை.

தட்டிய பூரியை அவர்கள் கடாயில் வீசும் அழகே அழகு.

பூரி சுடும் காட்சி, வயிற்றை கிள்ளி, பசியை அதிகப் படுத்தியது.


"ஏதோ சாதாரண ஹோட்டலா இருக்கும்" என்று உள்ளே போனால், A.C. Restaurant நம்மை குளு குளு என்று வரவேற்கிறது.

நல்ல கூட்டம்.


அமிர்தசரஸ் Kanha ஸ்வீட்ஸ் சோளே பூரி ஹோட்டல் 

"Variety இல்லாமல் ஒரே டிஃபனுக்கு இத்தனை ரசிகர்களா?"

"கூட்டம் அதிகமாச்சே. நமக்கு பூரி கிடைக்குமா?"

சந்தேகத்துடன் அமர்ந்தோம்.

சிறிது நேரத்தில் கூடை நிறைய பூரியுடன் ஒருவர் நுழைந்தார். ஆளுக்கு ஒரு பூரி போட்டார்.
அமிர்தசரஸ் Kanha Sweets சோளே பூரி 

பூரி ஒன்று. .

சைட் டிஷ் மூன்று.

சன்னா மசாலா. வெங்காயம். மாங்காய் இனிப்பு கூட்டு.

ஆம். மாங்காயில் இனிப்பு போட்டு செய்திருந்தார்கள். பெயர் தெரியவில்லை. சுவை தெரிந்தது. நன்றாக இருந்தது.

Star rated item என்றால்  சன்னா மசாலாவும் பூரியும்தான்.
அமிர்தசரஸ் Kanha Sweets சோளே பூரி


Recipe தெரியவில்லை. பூரியில் ஓம சுவையும் சிறிது கார சுவையும் தெரிந்தது. நம்மூர் பூரி போல காற்றில் பறந்து விடும் மெல்லிய பூரி அல்ல.  நிறைவான பூரி. தொட்டால் உடைந்து விடும் மொறு மொறு பூரி அல்ல. விண்டு வாயில் போடக் கூடிய strong ஆன பூரி.

நம்மூரில் செட் பூரி என்றால் சின்னதாகவும், சோளே பூரி என்றால் பெரிய சைஸிலும்  இருக்கும். ஆனால் அமிர்தசரஸ் Kanha ஹோட்டலில் சோளே பூரி சின்ன சைஸில் தான் இருக்கிறது.

அடுத்த கவலை. ஒவ்வொரு பூரியாக போட்டால் எப்ப சாப்பிட்டு முடிப்பது? கவலைப் படாதீர்கள் என்று பூரி கூடையோடு வந்தார் bearer. ஒரு பூரி சாப்பிட்டு முடிக்குமுன் அடுத்த பூரி வந்து விடுகிறது. ஆளுக்கு ஒரு பூரி என்று போடுவதால், யாருமே காத்திருப்பதில்லை. பூரி கனமாக இருப்பதால் மூன்று பூரிக்குமேல் சாப்பிடுவது கடினம். அது மட்டும் அல்ல. சன்னா மசாலா அருமையாக இருப்பதால், சன்னாவுக்கு பூரியை தொட்டு சாப்பிடும் நிலை.
அமிர்தசரஸ் Kanha Sweets சோளே பூரி

எங்களுடன் பயணித்த  என்னுடைய nieceக்கு  Breakfast சாப்பிடும் பழக்கமில்லை. இந்த  பூரியின்  சுவையில் மயங்கி 3 பூரி தின்றாள் என்பதிலேயே  இதன் சுவையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

"பூரின்னா அது Kanha Sweets பூரிதான். பேஷ்....பேஷ்.....ரொம்ப நன்னாருக்கு."


அமிர்தசரஸ் Kanha Sweets ஹோட்டல்

Wednesday 5 December 2018

அமிர்தசரஸ் ஃபேமஸ் குல்ஃபா

அமிர்தசரஸ்  ஃபேமஸ் குல்ஃபா
(Amritsar Famous Kulfa)

குல்ஃபா. .

NO...NO....

"குல்ஃபிக்கு பதில் குல்ஃபா என்று தப்பாக சொன்னேன்" என்று  நினைக்க வேண்டாம்.

குல்ஃபா.

அமிர்தசரஸ் குல்ஃபா.

பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸுக்கு ஒரு முறை Food Tour சென்று வந்தவர்களுக்கு குல்ஃபா என்றதுமே வாயூறும்.

அது என்ன குல்ஃபா? 

சந்தர்-
அமிர்தசரஸ் பேட்டரி ஆட்டோ ஓட்டுநர்


இதே கேள்வியை தான், நான் பயணித்த பேட்டரி ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்டேன். சந்தர் என்ற அந்த ஆட்டோ ஓட்டுனர் நல்ல tour guide ஆகவும் இருந்தார்.


"அமிர்தசரஸ் நகரிலேயே மிகச் சிறந்த குல்ஃபா கடைக்கு உங்களை அழைத்து செல்கிறேன்" என்று ஹிந்தியில் சொல்லி மென்மையாக சிரித்தார். அந்த சிரிப்பிலே இருந்த உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது.


அமிர்தசரஸ் ஃபேமஸ்  குல்ஃபா கடை 

அவர் நம்மை அழைத்து சென்ற இடம் Famous Kulfa Shop.

திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே இருந்த மைக்கேல் ஐஸ்க்ரீம் கடைபோல் இருந்தது.

ஆர்வத்தோடு குல்ஃபா ஆர்டர் செய்தோம்..

குல்ஃபா?


பஞ்சாப் குல்ஃபிக்கு கொஞ்சம் தூரத்து சொந்தம். நம்ம மதுரை ஜிகர்தண்டா, சென்னை ஃபலூடாவிற்கெல்லாம் ரொம்பவே நெருங்கிய சொந்தம்.

பஞ்சாப் குல்ஃபி, ஃபலூடா சேமியா, ரோஸ் சிரப், மலாய் ரப்ரி, பாதாம் பிசின், ஐஸ் க்ரீம் - இவற்றையெல்லாம் ஒன்றின் மேல் ஒன்றாக போட்டு தருகிறார்கள்.

"அட....அவ்வளவுதானா?" என்று நினைக்க வேண்டாம்.

ஏழூ ஸ்வரங்கள் சேர்ந்து நம் காதுகளுக்கு இனிமையான இசை தருவது போல, ஆறு விதமான சுவைகள் ஒரே நேரத்தில் உங்கள் சுவை மொட்டுக்களை தாக்கும். அட....அட....கொஞ்ச நேரத்திற்கு குல்ஃபா சுவையில் சொக்கிப் போய் விடுவீர்கள்.

குல்ஃபா சேமியா (Noodles for Kulfa)

குல்ஃபி

குல்ஃபா ரப்ரி (Rabri for Kulfa)

ஸ்பூனில் எடுத்து வாயில் வைத்ததும் அதீத குளிர்ச்சியும், அதிக இனிப்பும் புது விதமான உணர்வை தரும். அடுத்து நாம் மெல்லும் பலூடா சேமியா அதிக படியான இனிப்பை சற்றே மட்டுப் படுத்தும். "அப்படி எல்லாம் இனிப்பை குறைக்க நான் விட மாட்டேன்" என்று வந்து நிற்கும் ரோஸ் சிரப்பும், மலாய் ரப்ரியும். 'நான் இருக்கிறேன்' என்று அமைதியாக தலை காட்டும் பாதாம் பிசின்..

அட...இவ்வளவு நன்றாக இருக்கிறதே. இன்னொன்று சாப்பிடலாம் என்றால் முடியாது. ஒரு குல்ஃபாவில் வயிறு நிறைந்து விடும்.

ஐம்பது ரூபாயில் 'அன்லிமிட்டட்  மீல்ஸ்' சாப்பிட்ட திருப்தி.

நீங்கள் அமிர்தசரஸ் சென்றால் கட்டாயம் குல்ஃபா சாப்பிட்டு பாருங்கள்.

 ஃபேமஸ் குல்ஃபா , A1 குல்ஃபா - இந்த இரண்டு கடைகளுக்கும் கட்டாயம் சென்று, சுவைத்து மகிழுங்கள்.

அமிர்தசரஸ்  ஃபேமஸ் குல்ஃபா கடை

Amritsar Famous Kulfa Shop Menu


குல்ஃபா
(Amritsar Famous Kulfa Shop Kulfa)

Sunday 2 December 2018

அமிர்தசரஸ் லஸ்ஸி

அமிர்தசரஸ் லஸ்ஸி 
"லஸ்ஸி செய்வது ரொம்ப ஈஸி. கெட்டி தயிரில், சிறிது தண்ணீர் சேர்த்து, உப்பு அல்லது சர்க்கரை போட்டு, மிக்ஸி அல்லது hand blenderல் அடித்தால் லஸ்ஸி ரெடி. வேண்டும் என்றால் சிறிது ஏலக்காய் பொடி, குங்கும பூ சேர்க்கலாம். முடிந்தது வேலை."

அப்படிதான் இத்தனை நாளும் நினைத்திருந்தேன். பஞ்சாபின் அமிர்தசரஸ் செல்லும் வரை. 

அங்கு, லஸ்ஸி தயாரிப்பை ஒரு தவம் போல செய்கிறார்கள். திரும்பின இடம் எல்லாம் லஸ்ஸி கிடைக்கிறது. ஒரு கிளாஸ் லஸ்ஸி சாப்பிட்டால் போதும். மூன்று மணி நேரம் பசிக்காது. நம்மூர் டீ கடைகள் போல பார்க்கும் இடம் எல்லாம் சிறிய லஸ்ஸி கடைகள். தாபாக்களிலும் கட்டாயம் லஸ்ஸி உண்டு.

திரும்பின இடம் எல்லாம் லஸ்ஸி கிடைத்தாலும், லஸ்ஸிக்கென்றே சில ஸ்பெஷல் கடைகளும் உள்ளன.  Ahuja Lassi, Gian Di Lassi இப்படி பல லஸ்ஸி கடைகள். எங்களுக்கு டூரிஸ்ட் கைடு போல் செயல்பட்ட பேட்டரி ஆட்டோ ஓட்டுனர் சந்தரை கேட்டோம். Gian Di Lassi நன்றாக இருக்கும் என்று சொல்லி அழைத்துச் சென்றார்.


அமிர்தசரஸ் கியான் டி லஸ்ஸி கடை (Gian Di Lassi Shop, Amritsar)
ஆர்டர் கொடுத்து விட்டு, கடையை சுற்றிப் பார்த்தேன். சிறிய கடைதான். லஸ்ஸி மட்டுமே விற்பனை பொருள். ஆனால் அதற்கே ஐந்து பேர் வேலை செய்கிறார்கள். கடைக்கு பின்னால் சிறிய ஹால். அங்கே பார்த்தால் பெரிய சைஸ் கிரைண்டர்கள் இரண்டு இருந்தன. அவற்றில் தயிரை  கொட்டி நுரை ததும்ப அடிப்பார்களாம். அப்படி அடிக்கப் பட்ட தயிர் நுரைக்க நுரைக்க  உயரமான பிளாஸ்டிக் தொட்டிகளில் இருந்தது.  


லஸ்ஸி கிரைண்டர் 
தொட்டிகளில் தயிர் 

இந்த நுரை ததும்பும் தயிர்தான் லஸ்சிக்கான மூலப் பொருள். இந்த தயிரை ஒரு பானைக்குள் கொட்டி, ஐஸ் போட்டு வைத்திருக்கிறார்கள்..

நாம் லஸ்ஸி கேட்டதும், பைப் வைத்த பானையில் இருந்து தயிரை பெரிய கிளாசில் பிடித்து, மசாலா சேர்த்து, பக்கத்தில் இருக்கும் பெரிய தட்டில் இருந்து ஒரு கரண்டி வெண்ணெய் எடுத்து தாராளமாக போடுகிறார்கள். ஒரு ஸ்பூனை போட்டு நம் முன் கொண்டு வந்து வைக்கிறார்கள்.



லஸ்சியில் போட வெண்ணெய் 
ஸ்பூனில் வெண்ணெய்யை அள்ளி, சுவைத்து சாப்பிட வேண்டும். லஸ்சியையும் ஸ்பூனில் எடுத்து சாப்பிடலாம். அவ்வளவு கெட்டி. ஒரு கிளாஸ் லஸ்ஸி, கால் லிட்டருக்கு குறையாமல் இருக்கும். 

லஸ்ஸி நல்ல சுவை. வெண்ணெய்தான் கொஞ்சம் திகட்டியது.


சாப்பிட்டு முடித்ததும் ஒரு நிறைவு. அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பசி எடுக்கவில்லை. அமிர்தசரஸ் சென்றால் மறக்காமல் லஸ்ஸி சாப்பிடுங்கள்.



அமிர்தசரஸ் கியான் டி லஸ்ஸி கடை (Gian Di Lassi Shop, Amritsar)
அமிர்தசரஸ் கியான் டி லஸ்ஸி கடை (Gian Di Lassi Shop, Amritsar)

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...