Sunday 15 December 2013

மீண்டும் சங்கீத சபாவில்.........




ஜெய ராகவேந்திரா (சென்னை கல்சுரல் அகடமி) ப்ரூட் ஹல்வா
(பழ அல்வா)

       இன்று கச்சேரிக்கு விடுமுறை விடலாம் என்றுதான் நினைத்திருந்தேன்.   " ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது"   என்பார்கள். நிஜம்தான் போலும். மதியம் வாணி மகாலில் (மேற்கு மாம்பலம் ஞானாம்பிகா) இருந்தேன். முழு சாப்பாடு. 120 ரூபாய். இரண்டு வருடங்களுக்கு முன் இதே ஞானாம்பிகாவில் சாப்பாடு அவ்வளவு சுகமில்லை. அதற்குப்பின் அங்கே மதிய வேளையில் செல்வதில்லை. இந்த வருடம் அப்படியில்லை.



           அருமையான கல்யாண தளிகை. பருப்பும், வடையும்தான் மிஸ்ஸிங். அதை ஜனவரி 1 முஹூர்த்த சாப்பாட்டில் பார்த்துக் கொள்ளலாம்.



             பால் பாயசம், புடலங்காய் பொரிச்ச கூட்டு, கத்தரிக்காய் காராமணி கூட்டு, அவரைக்காய் கறியமுது, அளவில்லா சாதம், வெண்டைக்காய்  பருப்பு குழம்பு, சௌ சௌ மோர் குழம்பு,  கல்யாண ரசம், அப்பளம், கெட்டி மோர், பல காய் ஊறுகாய், பீடா - அப்படியே நம்மாத்து ருசி. ரசம் இலையில் ஓட, இலை ஓரத்தை மடக்கி பிடித்து, அத்தனை ரசத்தையும் உறிஞ்சு முடிச்சு......இதெல்லாம் அனுபவிச்சு ரொம்ப நாளாச்சு. வீட்டில் தட்டு சாப்பாடு. கல்யாண அழைப்புகளுக்கு மாலை ரிசப்ஷன் buffet க்குதான் போக முடிகிறது.

                    எங்கள் வீட்டில் வாரம் ஒருமுறை மோர்குழம்பு, பருப்பு உசிலி, மாதம் ஒருமுறை பொரிச்ச கூட்டு உண்டென்றாலும் .....இவை அனைத்தையும் ஒரே வேளையில் சாப்பிடுவது ஓர் அனுபவம்தான். 

          தேங்காய் போட்ட சிம்பிள் அவரைக்காய் பொறியல். அவரைக்காயின் பச்சை நிறம் மாறாமல் இருந்தது. அது மட்டும் இல்லை அவரைக்காய் துவண்டு, சுருண்டு போகாமல் பச்சை காய் போலவே இருக்க வேண்டும். சாப்பிடும்போது மென்மையாக இருக்க வேண்டும். அதுதான் நல்ல அவரைக்காய் கறியமுதின் இலக்கணம். அப்படியே இருந்தது.



                                                                                                               
              முன்பெல்லாம் காஞ்சிபுரத்து சமையல் ஒரு சுவையில் இருக்கும்.
தஞ்சை மண்ணின் கைமணம் வேறுமாதிரி இருக்கும். சென்னையில் வீட்டு சமையலுக்கு கூட ஒரு cosmopolitan சாயம் வந்து விடுகிறது. வெளியே சாப்பிட்டாலும் அச்சில் வார்த்தெடுத்த பொம்மை போல் ஒரே சுவை. Standardisation, quality control எல்லாம் corporate sector க்கு O.K. அது சமையலில் நுழைவதுதான் சகிக்கவில்லை.ஹோட்டல் சரவண பவன் சென்று பாருங்கள். எந்த கிளையில் சாப்பிட்டாலும், என்றைக்கு சாப்பிட்டாலும் சுவை மாறாது. இதில் ஒருவித சலிப்பு வந்துவிடுகிறது. சென்னையின் சங்கீத சீசன் இந்த சலிப்பிலிருந்து தற்காலிக விடுதலை தருகிறது.

                   சாயங்காலம் சென்னை கல்சுரல் அகடமியில் ஜேசுதாஸ். நல்ல கூட்டம்.... ஜெய ராகவேந்திராவில். ஜேசுதாஸ் கச்சேரி அன்று நிறைய வெரைட்டி உண்டு என்று இரண்டு நாட்களுக்கு முன்னரே சொல்லி விட்டார்கள். அப்புறம் அங்கு நான் இல்லை என்றால் எப்படி?

                       ப்ரூட் ஹல்வா (பழ அல்வா)வுடன் இனிய மாலை பொழுது துவங்கியது. அவசியம் சாப்பிட வேண்டிய இனிப்பு. அப்புறம்...அவல் பிசிபேளாபாத். ஒரு நல்ல மாறுதலான சுவை. அல்வாவும், அவல் பிசிபெளாபாத்தும் சாப்பிட்டால் போதும். அடுத்த 12 மணி நேரத்திற்கு பசிக்காது. Sumptuous food.


ஜெய ராகவேந்திரா (சென்னை கல்சுரல் அகடமி) அவல் பிசிபேளாபாத் 

                         இன்னமும் இரண்டு கச்சேரி பாக்கி இருக்கிறது. போகாவிட்டால் மவுண்ட்பேட்டன் மணி ஐயரும் (ஸ்ரீ பார்த்தசாரதி சபா), கொண்டித்தோப்பு பத்மநாப ஐயரும் (மியூசிக் அகாடமி) கோபித்து கொள்வார்கள். நீரு தோசை மற்றும் திரட்டுபாலுடன் காத்திருக்கிறார்கள். சென்று வந்தபின் சந்திக்கிறேன்.

No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...